உள்நாடு

ஊழல் மோசடிகளை ஒழிக்கின்ற ஆட்சிக்காக அனைவரும் அணி திரள்வோம் – வெற்றிக்கான கன்னிக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

“இந்நாட்டின் வரலாறு புதிதாக எழுதப்படுகின்ற இச் சந்தர்ப்பத்தில் இந்த வேலைத்திட்டத்தின் சாட்சியாளர்களாக அல்லாமல் பங்காளர்களாக மாறி, நாட்டின் வெற்றிப் பயணத்தில் பங்குதாரர்களாக இணைந்து கொள்வதோடு, நாட்டை வலுவூட்டும் இந்தப் பயணத்தின் தலைவர்களாகவும் மாறி செயற்படுமாறு அன்பு அழைப்பு விடுக்கின்றேன்” என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.“நடைமுறை ரீதியாகவும் முற்போக்கு ரீதியாகவும் இந்தக் காலத்தில் மக்களுக்காக கருத்துக்களை முன்வைத்து போராட்டங்களை நடத்தியுள்ளதோடு, ஊழல் மோசடிகளை இல்லாது ஒழிக்கின்ற நோக்கில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். ஏனைய கட்சித் தலைவர்களைப் போன்று மேடைகளில் ஏறி நாடகங்களை அரங்கேற்றாது, வெற்றுப் பைல்களைக் காண்பித்து மாக்களை ஏமாற்றுகின்ற நாடகங்களில் நடிக்காது, செயற்பட்டுள்ளோம்.

இந்நாட்டை வங்கரோத்து நிலைக்குக் கொண்டு சென்ற ராஜபக்ஷக்களை சட்டத்தின் முன் நிறுத்தி, ராஜபக்ஷக்கள் நிதி மோசடியில் ஈடுபட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளோம். திருடப்பட்ட நாட்டின் வளங்களையும், திருடப்பட்ட நாட்டின் பணங்களையும் மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக தனி நபர் சட்டமூலத்தை, ஐக்கிய மக்கள் சக்தியே முதல் முதலில் சமர்ப்பித்துள்ளது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமக்கோ அல்லது தமது கட்சி உறுப்பினர்களுக்கோ திருடர்களுடன் எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை. திருடர்களைப் பாதுகாக்கின்றவர்களோடும் எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை. கைவாறு அரசியலை நிறுத்துவதோடு, இந்த அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பேன்” என்றும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

2024 – ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியினதும், ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பங்கேற்ற, “வெற்றியின் முதல் பொதுக் கூட்டம்” நேற்று (16) குருநாகல் சத்தியவாதி மைதானத்தில் பெரும் சனத் திரளுக்கு மத்தியில் சிறப்பாக நடைபெற்றது.

இங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதில், ஐக்கிய மக்கள் சக்தியையும் ஐக்கிய மக்கள் கூட்டணியினையும் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டதுடன், குருநாகல் மாவட்டத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தி பெருந்திரளான மக்கள் இந்த வெற்றிக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, “மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் மற்றும் வைன் ஸ்டோர்களுக்கான அனுமதிப்பத்திரங்களுக்காகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்படுகின்ற யுகத்தை நிறைவு செய்வோம். ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள ஒவ்வொருவரும், வரங்களையும் வரப்பிரசாதங்களையும் எதிர்பார்க்காது, கொள்கைகளை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டே எம்மோடு இணைந்தனர்.

எமது கட்சியின் நிதி, “பிரபஞ்சம்” மற்றும் “மூச்சு” ஆகிய வேலைத்திட்டங்களுக்காகவே ஒதுக்கப்பட்டு வருகிறது. கட்சி மாறுகின்றவர்களுக்கும் கட்சி மாறுவதற்கு இடமளிப்பதோடு, செப்டம்பர் 21 ஜனாதிபதித் தெரிவு செய்யப்படுவது தொடர் கதைகளாகவே அன்றி மக்களின் வாக்குரிமை மூலமே தெரிவு செய்யப்பட்டு, பொதுமக்களின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவேதாடு, ஐக்கிய மக்கள் சக்தி சொல்வதைச் செய்கின்ற செய்வதைச் சொல்கின்ற கட்சியாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த காலங்களில் இனவாதத்தையும் மதவாதத்தையும் குரோதத்தையும் வைராக்கியத்தையும் அடிப்படையாக வைத்து அரசியல் தலைவர்கள் உருவாகினார்கள். அந்த குரோதத்திற்கு மத்தியில் தான், ஐக்கியத்திற்கான விதையை முளைக்கச் செய்து ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டுள்ளது. பிரித்தாளுகின்ற இந்தப் புற்று நோய்க்குப் பதிலாக அன்பையும் கருணையையும் உணர்வு பூர்வமான தன்மையையும் வெளிப்படுத்துகின்ற அரச நிருவாகத்தை உருவாக்கி, காயப்பட்டுள்ள இந்நாட்டைச் சுகப்படுத்துவதற்கு, தான் எப்போதும் தயாராக உள்ளேன்.

குரோதத்தை வெளிப்படுத்துகின்றவர்களை மக்கள் வெறுப்பதோடு, இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒதுக்கி, இலங்கைக்கேயான தன்மையுடன் கூடிய யுகத்தை உருவாக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி, மக்ளோடு மாத்திரமே ஒப்பந்தம் செய்திருக்கின்றது. நாட்டின் ஜனாதிபதிக்கு இலகுத்தன்மை காணப்பட்டாலும், ஜனாதிபதி உலக சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு உல்லாசங்களை அனுபவித்து வருவதோடு, நாட்டின் ஜனாதிபதி என்பவர் “நாட்டின் தற்காலிக பாதுகாவலரே” அன்றி, “நாட்டின் சொந்தக்காரர் அல்லர்” என்பதையும் தெளிவுபடுத்துகின்றேன்.

எனினும், நாட்டில் காணப்படுகின்ற பிரச்சினைகளை இனவாத மற்றும் சோசலிச சிந்தனையுள்ளவர்களால் தீர்க்க முடியாது. ஊழலையும் மோசடிகளைம் இல்லாமல் ஆக்கச்செய்து, திருடப்பட்டுள்ள நாட்டின் சொத்துக்களை மீண்டும் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான சக்தியை தனக்குப் பெற்றுத் தாருங்கள். மருந்துப் பொருட்கள் தொடர்பில் ஊழல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், அதற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியே கொண்டு வந்தது.

அந்த மருந்து ஊழலில் ஈடுபட்டவர்களிடமே நாட்டை மீண்டும் கையளிக்காமல், சரியான தீர்க்கமான முடிவை எடுக்கமாறு வேண்டிக் கொள்கின்றேன்.” என்றார்.


( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *