உள்நாடு

தேர்தல் பிரசாரத்தில் பொலித்தின் பயன்படுத்தத் தடை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது, பொலித்தின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.

பொலித்தின் பயன்பாடு அற்ற பிரசாரம் தொடர்பில் வேட்பாளர்களைத் தெளிவுபடுத்த வேண்டுமென, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில், வேட்பாளர்களைத் தெளிவுபடுத்த வேண்டுமென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரும், ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்களும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதேவேளை, பிரசாரங்களின் போது பாரியளவில் பொலித்தின் பயன்படுத்துவதனால், சுற்றுச் சூழலுக்கு பாரியளவு தீங்கு ஏற்படுவதாகவும் இவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதனைத் தவிர்ப்பது குறித்து தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடலொன்று நேற்று (06) கொழும்பில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின்போதே, இவ்விடயங்கள் குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, அமைச்சுக்களின் செயலாளர்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *