உள்நாடு

நீதிமன்றில் ஆஜராகுமாறு கமல் குணரத்ன, தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கு பணிப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை விபத்தின் மூலம் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் நீதிமன்றில் காரணங்களை தெளிவுப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன, தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஷானி அபேசேகரவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய முன்வைத்த காரணங்களை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், ஓகஸ்ட் 9ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகி காரணங்களை தெளிவுபடுத்துமாறும் கேட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, தனது கட்சிக்காரரை வாகன விபத்தை ஏற்படுத்தி கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், எந்த நேரத்திலும் இது நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில், தனது வாடிக்கையாளரின் உயிருக்கு ஆபத்து உள்ளது. தனது வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, பாதுகாப்பை அதிகரித்து அவரது உயிரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றை கோரினார்.

முன்வைக்கப்பட்ட காரணங்களை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், பிரதிவாதிகளை எதிர்வரும் 9ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியதுடன், அது தொடர்பான நோட்டீசை பிரதிவாதிகளுக்கு வழங்குமாறு மனுதாரர் ஷானி அபேசேகரவுக்கு உத்தரவிட்டப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *