உலகம்

கவிப்பேரரசு வைரமுத்து தொகுத்த “கலைஞர் 100 கவிதை” நூலில் இடம்பிடித்த பொத்துவில் அஸ்மின் கவிதை

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தொகுத்த ”கலைஞர் 100 கவிதைகள் 100” கவிதை நூலின் அறிமுகவிழா (ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி 2024) மாலை 6.00மணிக்கு சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறவுள்ளது.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தொகுப்பட்டுள்ள இத்தொகுப்பில் தமிழின் மிகச்சிறந்த 100 கவிஞர்களது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுதியில் நான் எழுதிய திருக்குவளை சூரியன் என்ற கவிதையும் களம் கண்டுள்ளது.

இலங்கையில் அதிகமான தமிழ் கவிஞர்கள் வாழும் மாகாணம் கிழக்கு மாகாணம். நாட்டார் பாடலை நயம்பட பாடக்கூடியவர்கள் எம்பிராந்திய மக்கள்.
இங்கு மீனே பாடும். நான் பாடுவதில் ஆச்சரியம் இல்லை. என் முற்றத்திலும் என் ரத்தத்திலும் கவிதை ஊறிக்கிடந்ததால்தான் நானும் கவிஞனானேன்.

என் மானசீக குரு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கவிதைகளால் ஆகர்சீகப்பட்டு 1997 ஆம் ஆண்டு கவிதை உலகுக்குள் நுழைந்தேன். என் கவிக்குழந்தை பருவத்தில் கவிப்பேரரசு அவர்களின் கவிதைகளை நடைவண்டியாய் எண்ணி நடைபழகியவன் நான் என்பதை என்றுமே மறவேன்.

2012 இல் “நான்” திரைப்படத்தில் நான் பாடலாசிரியராய் அறிமுகமானேன். என்னுள் நம்பிக்கை விதையை விதைத்து, நான் அழும்போதெல்லாம் என்னைத்தேற்றி, எனக்குள் இருக்கும் என்னை கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்தது கவிப்பேரரசு எழுதிய இதுவரை நான் என்றால் மிகையில்லை.

2013 இல் வெளிவந்த எனது “பாம்புகள் குளிக்கும் நதி” கவிதை நூலுக்கு கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வாழ்த்துரை வழங்கியிருந்தார். 2024 இல் இன்று அவர் தொகுத்திருக்கும் கலைஞர் அவர்களது வரலாற்று கவிதை நூலில் எனது கவிதையும் இடம்பெற்றுள்ளது.

இது சிலரை பொருத்தவரை இது சாதாரணமாகக்கூட தெரியலாம். ஆனால் என்னைப்பொருத்தவரை வாழ்நாள் சாதனையாக கருதுகின்றேன். இலட்சத்துக்கு அதிகமான கவிஞர்கள் இருக்கும் தமிழ் இலக்கிய சூழலில் 100 கவிஞர்களுக்குள் நானும் உள்வாங்கப்பட்டிப்பது எனது 27 ஆண்டுகால அயராத உழைப்புக்கு கிடைத்த பெரும் பரிசாகவே நான் பார்க்கின்றேன்.

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பு பிராந்தியத்தில், அம்பாரை மாவட்டத்தில் அமைந்துள்ள பொத்துவில் எனும் ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்த ஒரு சாமன்ய மனிதனுக்கு இது சாதனை அல்லாமல் வேறென்ன..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *