விளையாட்டு

இந்தியாவை வீழ்த்தி சம்பியன் மகுடம் வென்று வரலாறு படைத்தது சமரி தலைமையிலான இலங்கை அணி

9ஆவது மகளிர் ஆசியக்கிண்ண ரி20 தொடரின் இறுதிப் போட்டியில் சமரி அத்தபத்து மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகியோரின் அரைச்சதம் கடந்த அசத்தலான துடுப்பாட்டத்தின் உதவியுடன் 8 விக்கெட்டுக்களால் இலகுவாக இந்திய அணியை வீழ்த்திய இலங்கை அணி முதன் முறையாக மகளிர் ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது.

9ஆவது மகளிர் ஆசியக்கிண்ண ரி20 தொடர் தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் இடம்பெற்று வந்தது. இதில் 8 அணிகள் பங்கேற்றிருக்க முதல் சுற்று லீக் ஆட்டத்தில் ஒரு குழுவவில் 4 அணிகள் வீதம் இரு குழுக்கலாகப் பிரிக்கப்பட்டு முதல் சுற்று இடம்பெற்றன. பின்னர் 2ஆம் சுற்றான அரையிறுதிப் போட்டியில் குழு ஏ இல் முதலிடம் பிடித்த இந்திய அணி குழு பி இல் 2ஆம் இடம்பிடித்த பங்களாதேஷ் அணியை தோற்கடித்து முதல் அணியாய் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. பின்னர் இடம்பெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில் குழு பி இல் முதலிடம் பிடித்த இலங்கை அணி குழு ஏ இல் 2ஆம் இடம்பிடித்த பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது.

இந்நிலையில் இன்று தீர்க்கமான இறுதிப் போட்டி தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பித்திருந்தது. இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.இதற்கமைய முதலில் களம் நுழைந்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் ஸ்மிரிட்டி மந்தனா 60 ஓட்டங்களையும், ரிச்சா ஹோஸ் 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 166 என்ற சவாலான வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் கண்ட இலங்கை அணிக்கு ஆரம்ப வீராங்கனையான விஷ்மி குணரட்ன 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தார். இருப்பினும் களத்திலிருந்த இலங்கை அணியின் ஓட்ட இயந்திரமான தலைவி சமரியுடன் இணைந்தார் ஹர்ஷிதா சமரவிக்ரம. இருவரும் இணைந்து இந்தியப் பந்துவீச்சை வெளுத்துக் கட்டினர். அசத்தலான மற்றும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமரி அத்தபத்து அரைச்சதம் கடந்து மிரட்டினார்.

இலங்கை மகளிர் அணி 94 ஓட்டங்களைப் பெற்றிருக்க 61 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்தார் சமரி அத்தபத்து. இருப்பினும் அதுவரையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹர்ஷிதா சமரவிக்ரம அதிரடிக்கு மாற மற்றைய வீராங்கனையான கவிஷா டில்ஹாரி தன் பங்கிற்கு ஓட்டங்களை வேகமாக சேர்க்க ஹர்ஷிதா சமரவிக்ரம அரைச்சதம் கடந்தார். இதனால் இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்களில் 166 என்ற இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை மகளிர் அணி முதல் முறையாக சம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்தது. இவ் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகி விருதை ஹர்ஷிதா சமரவிக்ரம தட்டிச் செல்ல, தொடர் நாயகி விருதை இத் தொடரில் மொத்தமாக 304 ஓட்டங்களை விளாசி 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய இலங்கை அணியின் தலைவியான சமரி அத்தபத்து பெற்றுக்கொண்டார்.


(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *