ஜனாதிபதித் தேர்தல்: முதற்கட்ட அச்சிடும் பணிகள் நிறைவு..!
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முதற்கட்ட அச்சிடும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு, தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மற்றும் கட்டுப்பணம் தொடர்பான அச்சிடும் பணிகளை, அரச அச்சகம் பூர்த்தி செய்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தேர்தல் அதிகாரிகளை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலும் அரசாங்க அச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள மாவட்டச் செயலாளரை தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியாக நியமித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் உதவித் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியை தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான அடுத்த கட்ட ஆவணங்களை அச்சிடும் பணிகள், தற்போது இடம்பெற்று வருவதாகவும், அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே சுட்டிக்காட்டியுள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )