வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 860Kg மஞ்சள் உடன் கல்பிட்டியில் ஐவர் கைது…!
கல்பிட்டி பள்ளிவாசல்துறை கிராம சேவகர் பிரிவில் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டு வீடொன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான மஞ்சள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் ஐவரை கல்பிட்டிப் பொலிஸார் கைது செய்தனர்.
கல்பிட்டி பொலிஸ் விசேட பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய நேற்று (25) பிற்பகல் 4 மணியளவில் பள்ளிவாசல்துறை கிராம சேவகர் பிரிவிற்கு உற்பட்ட வெள்ளங்கரை பிரதேசத்தின் கல்பிட்டி பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட பிரிவு உத்தியோகக்கர்கள் விசேட சோதனை ஒன்றினை மேற்கொண்ட வேளையில் வீடொன்றில் சட்டவிரேதமாகக் கொண்டுவரப்பட்டு சூட்சுமமான முறையில் 20 போரை உறைகளில் பொதியிடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை மஞ்சள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் கைப்பற்றப்பட்ட மஞ்சளின் பெறுமதி சுமார் 17 இலட்சம் ரூபாய்களுக்கும் அதிகம் எனவும் அவை 860 கிலோ மற்றும் 250 கிராம் நிறையினைக் கொண்டது எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அத்துடன் சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைதுசெய்யப்பட்டதாகவும், அவர்கள் 35 தொடக்கம் 42 வயதுக்கு உட்பட்டர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், கைதுசெய்யப்பட்டவர்கள் பள்ளிவவாசல்துறை மற்றும் குறிஞ்சிப்பிட்டி பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஐவரும் இன்றைய தினம் (26) புத்தளம் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டதுடன் சந்தேகநபர்களை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி நீதவான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான மேலதீக விசாரனைகளை கல்பிட்டிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(அரபாத் பஹர்தீன்)