உள்நாடு

ஜனாஸா எரிப்பை நிறுத்தாது கோத்தாபய ஒரு முட்டாளாக செயற்பட்டிருக்கின்றார்..!  -ஐக்கிய காங்கிரஸ் கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத்

ஜனாஸா எரிப்பை நிறுத்தாது கோத்தாபய ஒரு முட்டாளாக செயற்பட்டிருக்கின்றார் என்பது எங்களுக்குத் தெரிகின்றது. நாங்கள் அவருக்கு ஆதரவான ஒரு கட்சியாக இருந்து பல கடிதங்கள் ஊடாக சுட்டிக்காட்டி இருந்தோம். எந்தக் கடிதத்திற்கும் அவர் பதில் தரவில்லை என, ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித் த‌லைவ‌ர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கல்முனையில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தனது கருத்தில்,
முன்னாள் ஜனாதிபதி, தான் ஜனாதிபதியாக இருந்து ஏன் விரட்டி அடிக்கப்பட்டேன் என்பது தொடர்பில் புத்தகம் ஒன்றினை எழுதி வெளியிட்டிருக்கின்றார். என்னைப் பொறுத்தமட்டில் இந்தப் புத்தகமானது, தற்போது வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என்றே கூற முடியும். இந்தப் புத்தகத்தை எழுதிவிட்டு அவர் இறந்த பின்னர் இந்தப் புத்தகம் வெளிவந்து இருந்தால், அவருக்கு ஓரளவு நல்ல பெயரைக் கொடுத்து இருக்கும்.
இப்போது இந்தப் புத்தகத்தை அவர் வெளியிட்டு விட்டு, தான் ஒரு குற்றமும் செய்யவில்லை, தன்னை சிலர் பழிவாங்கி விட்டார்கள் என்பது போன்று கூறுகின்றார். ஆனால், அவர் வெளியிட்ட புத்தகத்தை இன்னும் நான் படிக்கவில்லை. அந்தப் புத்தகம் தொடர்பில் வெளிவந்த செய்திகளை நாங்கள் பார்க்கின்ற போது, கோத்தாபய ஒரு முட்டாளாக செயற்பட்டிருக்கின்றார் என்பதாகவே எங்களுக்குத் தெரிகின்றது.
நாடு இவ்வாறு தான் சென்று கொண்டிருக்கின்றது என்பதை நாங்கள் அவருக்கு ஆதரவான ஒரு கட்சியாக செயற்பட்டு பல கடிதங்கள் ஊடாக சுட்டிக்காட்டி இருந்தோம். “ஜனாஸா எரிப்பை நிறுத்துங்கள். அது தொடர்பில் பேச எங்களுக்கு அனுமதி தாருங்கள்” எனக் கேட்டிருந்தோம். இது குறித்து பேச பல கடிதங்கள் அனுப்பி இருந்தோம். எந்தக் கடிதத்திற்கும் அவர் பதில் தரவில்லை.
ஒரு பெருமை பிடித்த மனிதனாக அவர் காணப்பட்டதனால் தான், இறைவன் அவருக்குத் தண்டனை கொடுத்து, இந்த நாட்டின் வரலாற்றிலேயே எந்தவொரு ஜனாதிபதிக்கும் நிகழாத ஒன்றை வழங்கி இருந்தான். நாட்டை விட்டு ஓடி ஒளிகின்ற கேவலமான நிலைக்கு கோத்தாபய சென்றார்.
இவரது புத்தகம், தற்போது உள்ள இனவாத சிந்தனையுடைய அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். ஜனாதிபதியின் அதிகாரம் என்பது, சாதாரணமான அதிகாரமல்ல. சர்வதிகாரம் கொண்ட ஒரு அதிகாரம் ஆகும். இந்த அதிகாரத்தை அவர் வைத்துக்கொண்டு, மஹிந்த உட்பட தனக்கு ஆதரவாகச் செயற்பட்ட கட்சிகளை ஒதுக்கினார்.
ஒரு கர்வம் உள்ள நபராகச் செயற்பட்ட காரணத்தினால் தான், அவர் தலை குப்புறமாக விழுந்தார். இவ்வாறு விழுந்ததிற்காக சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் பழி போடுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.
அவர் ஒரு நேர்மையான மனிதனாக இருந்திருந்தால், வெளியிட்ட புத்தகத்தில் தான் தவறு செய்தமையினால் தான், ஜனாதிபதி பதவியில் இருந்து ஓடி ஒளிய வேண்டி ஏற்பட்டிருந்தது என்பதை பகிரங்கமாக ஏற்று எழுதி இருந்தால், உண்மையில் பாராட்டுக்குரியதாக இருந்திருக்கும்.
யுத்த காலங்களில் கோத்தாபய ராஜபக்ஷ ஒரு ஹிரோவாக இருந்தார் என சொல்லப்பட்டாலும், முதலாவது ஹிரோவாக மஹிந்த ராஜபக்ஷவே இருந்தார். இவர் இரண்டாவது ஹிரோவாக இருந்தார் என்பதை இங்கு கூற முடியும்.
மஹிந்த ராஜபக்ஷதான் நாட்டினையும் யுத்தத்தையும் அக்காலப்பகுதியில் சரியாகக் கொண்டு சென்றவர். அவரது உத்தரவினைச் செயற்படுத்தும் நபராகவே கோத்தாபய ராஜபக்ஷ என்பவர் இருந்தார்.
ஆனால், சில சினிமாப் படங்களில் ஜோக்கர்கள் சில வெளைகளில் கதாநாயகர்களாக மாறுகின்ற மாதிரி, தன்னால் தான் யுத்தம் நிறைவு பெற்றது என்ற திமிர் அவரிடம் காணப்பட்டது.
இப்போது அவர் ஒரு பூச்சியமாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில், இவ்வாறான புத்தகத்தை எழுதி அரசியலுக்கு மீண்டும் வருவார் என சிலர் நினைக்கின்றார்கள். இது அவர்களது தப்புக் கணக்காகும் என்றார்.

 

( ஐ. ஏ. காதிர் கான் – பாறுக் ஷிஹான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *