அப்ரார் பவுண்டேஷன் நிகழ்வில் ஒமான் தூதுவர் பிரதம அதிதி
பேருவளை அப்ரார் பவுண்டேஷன் 11 ஆவது புலமைப் பரிசில் வழங்கும் விழா !!
பேருவளை,அப்ரார் பவுண்டேஷனின் குறைந்த வருமானம் பெறும் திறமையான மாணவ மாணவிகளுக்கான 11 ஆவது வருடாந்த புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு, எதிர்வரும் 21 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு பேருவளை ஐ.எல்.எம் சம்சுதீன் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
அமைப்பின் போசகரும்,முன்னாள் ஊடக அமைச்சரும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில், பிரதம அதிதியாக ஓமான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் அஹமத் பின் அலி பின் சயீத் அல்ராஷிதி அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்.
சிறப்பு விருந்தினராக இலங்கைக்கான பாலஸ்தீன நாட்டின் பதில் தூதுவர் ஹிஷாம் அபு தாஹா அவர்கள் கலந்துகொள்ளவுள்ளதோடு,விசேட பேச்சாளராக ஸம் ஸம் நிறுவனத்தின் ,தலைமை நிறைவேற்று அதிகாரி எம்.எச் ஹிஷாம் அவர்கள் கலந்து விசேட உரையாற்றவுள்ளார்.
அப்ரார் பவுண்டேஷனின் தலைவர் அல்ஹாஜ் ஏ.ஜே.எம் நிஸாம் அவர்களின் வழிகாட்டலில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பேருவளை பிரதேசத்தின் -மரதானை, மஹகொட, மாளிகாஹேன ஆகிய பகுதிகளிலுள்ள தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தினகரன் நாளிதழ்,தினகரன் வாரமஞ்சரி மற்றும் பேருவளை நியூஸ் குழுமத்தின் ஊடக அனுசரணையில் வெகு விமரிசையாக நடைபெறவுள்ள இவ்விழாவில், பாடசாலை அதிபர்கள், ஊர் பிரமுகர்கள், உலமாக்கள், மாணவ மாணவிகள்,கல்வி நலன் விரும்பிகள் என பலரும் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.
(பீ.எம்.முக்தார்)