உள்நாடு

ஜனாதிபதி தலைமையில் 50,000 குடும்பங்களுக்கு உரிமை பத்திரங்கள் நிகழ்வு இன்று கொழும்பில்..!

கொழும்பு நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு உரிமைப் பத்திரம் வழங்கும்  “ரன்தொர உறுமய” நிகழ்ச்சித் திட்டம்  இன்று (17) பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இதன் முதற்கட்டமாக 1117 “ரன்தொர உறுமய” உரிமைப்பத்திரங்கள் வழங்கப்பட உள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

அதாவது நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 937 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் 180 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் வழங்கப்படவுள்ளன.

இதன்படி, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான மிஹிந்து செத்புர, சிரிசர உயன, மெட்ரோ வீட்டுத் தொகுதிகள் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள முப்பத்தொரு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு இந்த ” ரன்தொர உறுமய” உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 2024 வரவு செலவுத் திட்ட முன்மொழிவின்படி, 20 இலட்சம் பேருக்கு காணி உரிமையை வழங்கும்  “ரன்தொர உறுமய” பத்திரப்பதிவுத் திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக,  முழு உரிமைகளை வழங்கி ” ரன்தொர உறுமய” உரிமைப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கொழும்பில் உள்ள குறைந்த வருமானம் பெறும்  அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அரை மில்லியன் குடும்பங்கள் இந்த “ரன்தொர உறுமய” உரித்துரிமை உறுதிகளைப் பெறவுள்ளார்கள் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

அதன்படி தற்போதைய அரசால் கிராமம் முதல் நகரம் வரை உறுதி பத்திரம் வழங்கும் திட்டத்தை கொண்டு வர முடிந்தது என்றார்.

ரன்தொர உறுமய  உரித்துரிமை உறுதி பத்திரம் வழங்கும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 2024 வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகவும், இதில் மறைமுக அரசியல் ஆர்வம் இல்லை எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *