கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் 20வது வருடாந்த புலமைப்பரிசில் விழா..!
கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 20வது வருடாந்த புலமைப்பரிசில் விழா காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 600 மாணவர்கள் பதக்கம் அணிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு, “புலமைத்தாரகை” நூலும் வெளீட்டு வைக்கப்பட்டது.
கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற சுங்க அதிகாரியுமான எஸ்.எல்.மன்சூர் தலைமையில் கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தலைவருமான ஏ.எல்.மீராசாகிப் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹீர் மௌலானா, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்
அமீர் அலி உட்பட கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் நிருவாகிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது அதிதிகள் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தினால் இதுவரை நாடு பூராவுமுள்ள 2,000 தமிழ்மொழி மூல பாடசாலைகளிலிருந்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற 3,700 மாணவர்கள் கெளரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(எம்.எம்.றம்ஸீன்)