உள்நாடு

புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஆளுனர் நஸீர் அஹமட் பங்கேற்பு

புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் தலைமையில் புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் புத்தளம் மாவட்டத்தின் நீர்வாழ் உயிரின வளர்ப்பு, கல்வி முன்னேற்றம், விளையாட்டு அபிவிருத்தி, பாதை அபிவிருத்தி, சுகாதாரம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, நீர் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் மற்றும் அவற்றின் தற்போதைய தேவைப்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் காலங்களில் புத்தளம் மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஒவ்வொரு துறை ரீதியாகவும் தனித்தனியான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும், அதன் ஊடாக மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் துரித கதியில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது தனது நோக்கம் என்றும் ஆளுனர் நஸீர் அஹமட் இதன் போது சுட்டிக் காட்டினார்.

புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் காட்டிவரும் கூடுதல் கரிசனை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டனர்.

மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அமல் சிந்தக மாயாதுன்ன, உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் உள்ளிட்ட பலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.


(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *