Sunday, October 6, 2024
Latest:
உள்நாடு

சர்வ முஸ்லிம் கட்சி மாநாட்டை கூட்டி பிரச்சினைக்கான தீர்வை பெற முயற்சிகளை செய்ய வேண்டும்..! தேர்தல் காலமென்பதால் இனவாதம் வெளிப்படுகிறது..! -ஹரீஸ் எம்.பி உரை

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் சர்வ முஸ்லிம் கட்சி மாநாட்டை கூட்டி இனப்பிரச்சினைக்கான தீர்வு, நிலையான அபிவிருத்திக்கான தீர்வு, நிர்வாக மற்றும் அதிகார பரவலாக்கத்திற்கான தீர்வை பெற முயற்சிகளை செய்ய வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றிய அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் அம்பாறை மாவட்ட ஒலுவில் பிரதேசத்தில் தீகவாவியை சுற்றி மக்கள் குடியேற்றத்தை அமைத்தார் என்று எனது பல்கலைக்கழக காலத்து நண்பர் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே அவர்கள் பொய்யான குற்றச்சாட்டொன்றை சபைக்கு முன்வைத்துள்ளார். உண்மையில் தீகவாவி பிரதேசத்தில் இன்று சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் நல்லுறவுடன் வாழ்கிறார்கள். தனது இனவாத அரசியலுக்காக இன்று, நேற்று குடியேற்றம் வந்தது போல அவர் இந்த விடயத்தை பேசியிருக்கிறார்.
தொல்பொருள் சட்டத்தின் படி முறையாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு அந்த மக்கள் எவ்வித பிரச்சினைகளும் இல்லாது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களினால் தீகவாவி விகாரைக்கோ அல்லது அங்கிருக்கும் மதஸ்தலங்களுக்கோ எவ்வித இடையூறும் இல்லையென்பதை அங்கிருக்கும் அதிகாரிகள் சட்சி கூறியிருக்கிறார்கள். இவ்வாறு இருக்கும் போது நாடு தேர்தலொன்றை சந்திக்க உள்ள காலமென்பதால் இனவாதம் கட்டவிழ்த்து விடப்படுகிறது – என்றார்
(நூருல் ஹுதா உமர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *