விளையாட்டு

தென்னாபிரிக்காவை துரத்தும் துரதிஷ்டம்; திரில் வெற்றி பெற்று சம்பியனானது இந்தியா

9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தீர்மானமிக்க இறுதிப் போட்டியில் விராட் கோஹ்லியின் பொறுப்பான துடுப்பாட்டமும் பாண்டியா மற்றும் பும்ராவின் மிரட்டலான பந்துவீச்சும் கைகொடுக்க ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 7 ஓட்டங்களால் திரில் வெற்றி பெற்று 9ஆது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் சம்பியன் மகுடத்தை தனதாக்கியது.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெற்றுவரும் 9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரில் அனைத்து லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்டுக்களால் வீழ்த்திய தென்னாபிரிக்க அணி முதல் முறையாக ரி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. பின்னர் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியனான இங்கிலாந்து அணியை 63 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய அணி 10 வருடங்களின் பின்னர் ரி20 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

இந்நிலையில் இலங்கை நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு பார்படோஸ் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமான இறுதிப் போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ரோஹித் சர்மா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.இரு அணிகளும் அரையிறுதி ஆட்டங்களில் பங்கேற்ற அதே பதினொருவரை இப் போட்டியிலும் களமிறக்கியிருந்தது. இதற்கமைய இந்திய அணியின் ஆரம்ப வீரர்களான ரோஹித் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் களம் நுழைந்தனர்.

அதற்கமைய தென்னாபிரிக்க சார்பில் முதல் ஓவரை மர்கோ ஜன்சென் வீச கோஹ்லி 3 நான்கு ஓட்டங்களை விளாச அவ் ஓவரில் 15 ஓட்டங்களைப் பெற்றது இந்திய அணி. மேலும் 2ஆவது ஓவரை கேசவ் மஹராஜ் பொறுப்பேற்று வீச முதல் இரு பந்துகளில் 4 ஓட்டங்களை விளாசிய ரோஹித் 3ஆவது பந்தில் கிளாசனிடம் பிடிகொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ரிசப் பாண்ட் அவ் ஓவரின் 5ஆது பந்தில் டி கொக்கிடம் பிடி கொடுத்து டக் அவுட் ஆக இந்திய ரசிகர்கள் அமைதியாகினர்.

பின்னர் வந்த சூரியகுமார் யாதவ் 3 ஓட்டங்களுடன் ரபாடரின் வேகத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுக்க இந்திய அணி 34 ஓட்டங்களுக்கு முதல் 3 விக்கெட்டுக்களையும் இழந்து தடுமாறியது. பின்னர் 4ஆவது விக்கெட்டில் கோஹ்லியுடன் இணைந்த அக்ஷர் பட்டேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த விராட் கோஹ்லி நிதானமாய் ஓட்டங்களைச் சேர்த்தார். தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களை விளாசித் தள்ளிய அக்ஷர் பட்டேல் 4 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 47 ஓட்டங்களைப் பெற்றிருக்க துரதிஷ்டவசமாக ரன்அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இந்த ஜோடி 4ஆது விக்கெட்டில் பெருமதியான 72 ஓட்டங்களை பெற்றிருந்தது.

5ஆவது விக்கெட்டிற்காக களத்திலிருந்த விராட் கோஹ்லியுடன் இணைந்த சிவம் டூபே வந்த வேகத்தில் ஆறு , நான்கு என விளாசி அணியின் ஓட்ட வேகத்தை அதிகப்படுத்த நிதானம் காட்டிய கோஹ்லி 48 பந்துகளில் அரைச்சதம் பதிவு செய்து நம்பிக்கை கொடுத்தார். அரைச்சதம் கடந்ததன் பின்னர் ரபாடரின் ஓவரில் ஒரு 6 மற்றும் ஒரு 4 ஓட்டங்களை விளாசி அதிரடிக்குத் திரும்பினார் கோஹ்லி. இரு துடுப்பாட் வீரர்களும் தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களை சுவம்சம் செய்ய ஆட்டம் கண்டது பலமிக்க தென்னாபிரிக்க பந்துவீச்சு வரிசை.

பின்னர் 19ஆவது ஓவரை ஜன்சென் வீச அதன் 2ஆவது பந்தில் 4 ஓட்டத்தையும் 4ஆவது பந்தில் 6 ஓட்டத்தையும் பறக்கவிட்ட கோஹ்லி 5ஆவது பந்தில் பிடிகொடுத்து 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்துகளம் நுழைந்த பாண்டியா முதல் பந்தில் 4 ஓட்டத்தை அடித்து மிரட்டினார். 20ஆதும் இறுதியுமான ஓவரில் சிவம் டூபே 4 ஓட்டம் ஒன்றை அடித்து 4ஆவது பந்தில் மில்லரிடம் பிடிகொடுத்து 27 ஓட்டங்களுடன் வெளியேற இறுதிப் பந்தில் ஜடேஜா ஆட்டமிழக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது இந்திய அணி. பந்துவீச்சில் மஹராஜ் மற்றம் நேர்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பின்னர் முதல் உலகக்கிண்ணத்தை வெற்றி கொள்ள 177 ஓட்டங்கள் பெறவேண்டும் என்ற நிர்ப்பந்தத்துடன் பதிலுக்கு களம் நுழைந்த தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப வீரர்களான டி கொக் மற்றும் ரீசா ஹெக்டிக் ஜோடி எதிர்பார்த்த ஆரம்பத்தை கொடுக்கவில்லை. 2ஆவது ஓவரை வீசிய பும்ராவின் வேகத்தில் ரீசா ஹென்ரிக்ஸ் 4 ஓட்டத்துடன் போல்ட் ஆக , அர்ஸ்தீப் சிங்கின் அடுத்த ஓவரில் அணித்தலைவர் மார்க்ரம் 4 ஓட்டங்களுடன் பாண்டிடம் பிடிகொடுத்து வெளியேற தென்னாபிரிக்க அணி 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து பறிதவித்தது.

இந்நிலையில் 3ஆவது விக்கெட்டில் இணைந்த டி கொக் மற்றும் ஸ்டப்ஸ் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடி வேகமாக ஓட்டங்களைச் சேர்த்தனர். இந்த ஜோடி தமக்கிடையில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்திருக்க இளம் வீரரான ஸ்டப்ஸ் 31 ஓட்டங்களைப் பெற்று அக்ஷர் பட்டேலின் சுழலில் போல்ட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த கிளாசன் பாண்டியாவின் ஓவரில் சிக்ஸ் அடித்து ஓட்டக்கணக்கை ஆரம்பித்தார்.

தொடர்ந்து கிளாசன் அதிரடியில் அசத்த தென்னாபிரிக்க அணி 100 ஓட்டங்களை கடக்க இந்த ஜோடி 36 ஓட்ங்களைப் பெற்றிருந்த நிலையில் நம்பிக்கை கொடுத்த டி கொக் 39 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார். அடுத்து கிளாசனுடன் இணைந்த மில்லர் 6 மற்றும் 4 ஓட்டங்களுடன் கணக்கை ஆரம்பிக்க அதிரடியின் மிரட்டிய கிளாசன் அக்ஷர் படேல் வீசிய 15ஆவது ஓவரில் 4,6,6,4,2 என அடித்துத் துவைத்தர். இதனால் தென்னாபிரிக்க அணி 15.2 ஓவரில் 150 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

தொடர்ந்த போட்டியில் 17ஆவது ஓவரை ஹர்திக் பாண்டியா வீச முதல் பந்திலே அதிரடியில் மிரட்டிய க்ளாசன் 5 ஆறு ஓட்டங்கள் 2 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 27 பந்துகளில் 52 ஓட்டங்களுடன் பாண்டிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஜன்சென் பும்ரரின் வேகத்தில் 2 ஓட்டங்களுடன் போல்ட் ஆனார். இறுதியில் 12 பந்துகளுக்கு 20 ஓட்டங்கள் தேவையாய் இருந்தது தென்னாபிரிக்க அணிக்கு.

19ஆவது ஓவரை வீசிய அர்ஸ்தீப் சிங் வெறும் 4 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுக்க தென்னாபிரிக்க அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 16 ஓட்டங்கள் என்ற நிலை ஏற்பட்டது. இந்திய அணி சார்பில் இறுதி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அவ் ஓவரின் முதல் பந்தில் மில்லர் மிட் ஓப் திசையில் உயர்த்தி அடிக்கை அதை அற்புதமாக சூரியகுமார் யாதவ் பிடியெடுக்க 21 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார் மில்லர். 2ஆவது பந்தில் ரபாடா 4 ஓட்டங்களை அடிக்க மைதானம் அமைதி ஆனது. அடுத்த பந்தில் பை மூலம் ஒரு ஓட்டம் கிடைக்கப் பெற 3 பந்துகளில் 11 ஓட்டங்கள் தேவையானது. 4ஆது பந்தில் ஒரு ஓட்டம் மஹராஜால் பெறப்பட்டதுடன், அடுத்தபந்து வைட்போலாக , 5ஆவது பந்தில் ரபாடா பிடிகொடுத்து வெளியேற ,1 பந்திற்கு 9 ஓட்டங்கள் தேவையாய் மாறியது. இறுதிப் பந்தில் நேர்டிச் 1 ஓட்டத்தை பெற தென்னாபிரிக்க அணியால் 20 ஓர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களையே பெறமுடிந்தது.

இதனால் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 7 ஓட்டங்களால் திரில் வெற்றி பெற்று 9ஆவது ரி20 உலகக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது. பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுக்களையும், பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இக் கிண்ணத்துடன் இந்திய அணி 2ஆவது முறையாகவும் ரி20 உலகக்கிண்ணத்தை கரம் பற்றி அசத்தியது.

இப் போட்டியின் நாயகனாக 76 ஓட்டங்களை பொருப்புன் நின்று பெற்றுக் கொடுத்த விராட் கோஹ்லி தெரிவானார். மேலும் இவ் 9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் சிறப்பாட்டக் காரருக்கான விருதை 8 போட்டிகளில் 15 விக்கெட்டுக்களை அள்ளிச் சுருட்டி துடுப்பாட்ட வீரர்களை வேகத்தால் மிரட்டிய இந்தியாவின் ஜெஸ்பிரிட் பும்ரா தெரிவானார். அத்துடன் இத் தொடரில் ரஹ்மதுல்லா குர்பாஸ் 8 போட்டிகளில் 281 ஓட்டங்களை விளாசியுள்ளார்.

அத்துடன் அதிக வவிக்கெட்டுக்களை ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளரான பஸால்ஹக் பரூக்கி 17 மற்றும் இந்தியாவின் அர்ஸ்தீப் சிங் 17 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர். இத் தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மேற்கிந்தியத் தீவுகளின் நிக்கலஸ் பூரான் பெற்றுக் கொண்ட 98 ஓட்டங்கள் பதிவாகியுள்ளது. மேலும் சிறந்த பந்துவீச்சுப் பிரதியாக உகண்டா அணிக்கு எதிரான ஆப்கானின் பரூக்கி பெற்ற 9 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்கள் பதிவாகியது.

அத்துடன் இத் தொடரில் அதிக அரைச்சதங்களாக ஆப்கான் வீரர் குர்பாஸ் பெற்ற 3 அரைச்சதங்கள் பதிவாகியுள்ளது. மேலும் இவ் 9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொரில் அஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பெட் கமின்ஸ் இரண்டு தடவைகளும் , இங்கிலாந்தின் கிறிஸ் ஜோர்தான் ஒரு தடைவையும் ஹெட்ரிக் சாதனையை படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *