உள்நாடு

இரத்த காயத்துடன் ஆணின் சடலம் மீட்பு

இரத்த வெள்ளத்தில் கிடந்தவாறு ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை எனும் பகுதியில் (27) இடம்பெற்றுள்ளது.

மது போதைக்கு அடிமையான நபர் ஒருவர் தனது வீட்டில் தனிமையில் இருக்கும் போது வீட்டில் ஜன்னல் கண்ணாடியை கையால் ஓங்கி குத்தியபோது முழங்கைக்கும் புஜத்துக்கும் இடையிலான தசைப்பகுதியின் நாடி நரம்பு அறுந்து விரைவாக குருதி வெளியேறி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

ஒரு குழந்தையின் தந்தையான இவர், போதைக்கு அடிமையாகி மனைவியுடன் முரண்படும் விடயமாக பல தடவைகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினமும் போதையில் மனைவியை தாக்க முற்பட்ட போது மனைவி வீட்டை விட்டு வெளியே சென்ற ஆத்திரத்தில் குறித்த நபர் ஜன்னல் கண்ணாடியை உடைக்கும் போது இரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலே மரணமடைந்துள்ளார்.

சம்பவத்தை அறிந்த கரடியனாறு பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று முறைப்பாட்டினை பதிவு செய்ததுடன், பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர், பொலிஸ் பொறுப்பதிகாரியின் வேண்டுகோளை ஏற்று மரண விசாரணைகளை தொடர்ந்தார்.

சம்பவம் இடம்பெற்ற அறை முழுவதும் இரத்த வெள்ளமாகவே காட்சியளித்தது. பின்னர், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை முடிவுற்றதும் சடலத்தை உவினர்களிடம் ஒப்படைத்தனர்.

அதிக குருதி வெளியேற்றமே மரணத்திற்கான காரணம் என கண்டறியப்பட்டிருந்தது. மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


(எச்.எம்.எம்.பர்ஸான் – ஓட்டமாவடி நிருபர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *