உள்நாடு

கற்பிட்டியில் 1713 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு

கற்பிட்டி – முதலைப்பாளி மற்றும் நுரைச்சோலை ஆகிய பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் நேற்று (28) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கற்பிட்டி கடற்படையினர் முதலைப்பாளி கடற்பிரதேசத்தில் விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது அங்கு 14 உர மூடைகளில் அடைக்கப்பட்ட 513 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், நேற்றைய தினம் கற்பிட்டி – நுரைச்சோலை பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட மற்றுமொரு தேடுதல் நடவடிக்கையின் போது, காட்டுப் பகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 33 உர மூடைகளில் அடைக்கப்பட்ட 1200 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 1713 கிலோ கிராம் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தமது பொறுப்பில் வைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களில் கற்பிட்டி பிரதேசத்தில் பத்தலங்குண்டு, இப்பந்தீவு, கீரிமுந்தல், மாம்புரி, தேத்தாப்பொல மற்றும் தளுவ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பல கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


(ரஸீன் ரஸ்மின்)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *