உள்நாடு

அநீயாயங்களை சுட்டிக்காட்டி நீதிகோரி உரியவர்களிடம் நாங்கள் பேசியும் இந்த நிமிடம் வரை நியாயங்கள் கிடைக்கவில்லை. – எச்.எம்.எம். ஹரீஸ் (எம்.பி)

யுத்த காலத்தில் காரைதீவின் பல்லாயிரக்கணக்கான தமிழ் சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்டி அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் சம்மாந்துறை முஸ்லிம் சமூகம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. அப்படிப்பட்ட மக்கள் மீது இனவாதமாக விரல் நீட்டுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோன்று அவர்கள் இழந்து நிற்கும் உரிமைகள், கரங்கா காணிப்பிரச்சினை, பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்த வேண்டிய தேவை, நிர்வாக அதிகாரிகளுக்கு முறையற்ற நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை போன்ற சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் வழங்கப்பட்டு உடனடியாக அந்த மக்களின் தேவைகள் நிவர்த்தி கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம். முஹம்மட் ஹரீஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து தனது மண்ணின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தி வந்த அம்பாரை மாவட்டத்தின் இதயமாக இருக்கும் சம்மாந்துறை தொகுதி இன்று தனது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்திருக்கும் சந்தர்ப்பத்தில் எல்லோரும் வந்து பந்தாடும் இடமாக சம்மாந்துறை மாறி  வருகிறதை எண்ணி நாங்கள் வேதனையுடன் இருக்கிறோம். அந்த மாவட்டத்தில் அந்த மக்களின் வாக்குகளை பெற்ற அந்த மக்களின் பாராளுமன்ற பிரதிநிதி என்ற வகையில் அங்கு நடைபெறும் அநீயாயங்களை சுட்டிக்காட்டி நீதிகோரி உரியவர்களிடம் நாங்கள் பேசியும் இந்த நிமிடம் வரை நியாயங்கள் கிடைக்கவில்லை.

அந்த மக்களின் நிர்வாக பதவிகளில் நிறைய அநியாயங்கள் நடக்கிறது. நாட்டின் சட்டங்களை மீறி, உள்ளூராட்சி சட்டங்கள், நகர திட்டமிடல் சட்டங்கள் போன்ற பல சட்டங்களை மீறி எவ்வித முறையான அனுமதிகளுமின்றி சில நிர்மாணப் பணிகளை செய்கின்ற போது சட்டரீதியாக செய்யுமாறு பணித்தாலும் அவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாது சட்டத்தை மீறி நடக்கும் போது அதை இனவாத கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். அது பற்றி பாராளுமன்ற அமர்விலும் பேசப்பட்டுள்ளது.

பல வரலாறுகளை கூறி சம்மாந்துறை மக்களை பிழையான கண்ணோட்டத்தில் இன்று காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அநீதிக்குள்ளான சம்மாந்துறை மக்களின் பாராளுமன்ற பிரதிநிதி என்ற வகையில் இன்னும் அநீதிக்குள்ளாக்கும், இனவாத சாயம் பூசும் நடவடிக்கையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காரைதீவில் வன்முறை மூண்டபோது காரைதீவின் பல்லாயிரக்கணக்கான தமிழ் சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்டி அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் சம்மாந்துறை முஸ்லிம் சமூகம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. அந்த மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கள் வழங்கப்பட்டு உடனடியாக அந்த மக்களின் தேவைகள் நிவர்த்திகப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் – என்றார்.

 

(நூருல் ஹுதா உமர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *