உள்நாடு

“அரகலய போராட்டக் குழு” வினரால் “மக்கள் போராட்ட முன்னணி” என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கம்..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு, “அரகலய போராட்டக் குழு” வினர் ‘மக்கள் போராட்ட முன்னணி’ என்ற புதிய அரசியல் இயக்கம் ஒன்றை நேற்று (19) ஆரம்பித்தனர்.
முன்னாள் மாணவ செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கி, இந்தப் புதிய மக்கள் போராட்ட முன்னணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரகலய செயற்பாட்டாளர் லஹிரு வீரசேகர, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களுக்கு இடையிலான முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, முன்னணி சோசலிசக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களான சட்டத்தரணி நுவான்போபகே, ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர மற்றும் இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள், இந்தப் புதிய அரசியல் இயக்கத்தில் அங்கம் வகிக்கின்றனர்.
இன்று (19) இந்தப் புதிய அரசியல் இயக்கத்தினை ஆரம்பித்து வைத்து, இது தொடர்பாக இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த வசந்த முதலிகே,
“அரகலய போராட்டம், கடந்த காலத்தில் அமைப்பு முறை மாற்றத்தைக் கோரியே முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்படவில்லை. தற்போதைய ஜனாதிபதி தற்போதைய முறைமையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளார்.
நாட்டில் ஸ்திரத்தன்மை இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை. நாளாந்த வாழ்க்கையில் மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
எனவே, இலங்கையின் எதிர்காலத்திற்கு, புதிய அரசியல் அமைப்பினை அறிமுகப்படுத்தும் நோக்குடனேயே, இப்புதிய அரசியல் இயக்கத்தினை உருவாக்கியுள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

( ஐ. ஏ. காதிர் கான்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *