உள்நாடு

பாராளுமன்றத்தில் இன்று விஷேட அறிக்கை வெளியிடும் ஜனாதிபதி.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (18) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது தவணைக்கான அங்கீகாரம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்து வெளியிட உள்ளார்.

இதேவேளை ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாரம் பாராளுமன்ற பணிகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாரம் காலை 09.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், இன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுலா சட்டத்தின் கீழும், அரச காணி கட்டளைச் சட்டத்தின் கீழும், விளையாட்டு ஊக்கமருந்து தடைச் சட்டத்தின் கீழும் பல விதிமுறைகள் விவாதிக்கப்பட உள்ளன.

இதேவேளை, அரசியலமைப்பு பேரவை அதன் தலைவரும் சபாநாயகருமான மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று கூடவுள்ளது. சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்பு தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சஞ்சய் ராஜரத்தினத்திற்கு 06 மாத கால சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிபாரிசு செய்திருந்தமையினால் அரசியலமைப்பு சபையின் அங்கீகாரம் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *