விளையாட்டு

9ஆவது ரி20 உலகக்கிண்ணம்.- ஆறுதல் வெற்றியுடம் தாயகம் திரும்பும் இலங்கை அணி

9ஆவது ரி20 உலக்கிண்ண தொடரின் தனது இறுதி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை திணறடித்த இலங்கை அணி 83 ஓட்டங்களால் மிக இலகு வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியுடன் தாயகம் திரும்புகின்றது.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெற்றுவரும் 9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணி ஏற்கனவே தனது 2ஆவது சுற்றான சுப்பர் 8 வாய்ப்பை இழந்திருக்க குழு நிலையின் இறுதி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை இன்று சென் லூசியாவிலுள்ள டெரன் சமி மைதானத்தில் எதிர்த்தாடியது.

இப்போட்டி இலங்கை நேரப்படி காலை 6 மணிக்கு ஆரம்பமானது. இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்திருந்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடக் களம் நுழைந்த இலங்கை அணிக்கு ஆரம்ப வீரரான பெத்தும் நிஸங்க டக்அவுட் ஆகி ஏமாற்றம் கொடுத்தார். அடுத்துவந்த கமிந்து மெண்டிஸ் 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இருப்பினும் களத்திலிருந்த ஆரம்ப வீரரான குசல் மெண்டிஸ் அதிரடி காட்டி 29 பந்துகளில் 46 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழக்க, தனஞ்சயடி சில்வா தன் பங்கிற்கு 34 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க இலங்கை அணி 100 ஓட்டங்களைக் கடந்தது.

பின்னர் வந்த சரித் அசலங்க அதிரடியாய் விளையாடி 5 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 21 பந்துகளில் 46 ஓட்டங்களையும், மெத்யூஸ் ஆட்டமிழக்காமல் 30 மற்றும் வனிந்து 20 என ஓட்டங்களை சேர்த்துக் கொடுக்க 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் வென் பீக் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 202 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த நெதர்லாந்து அணிக்கு மிச்சல் லெவிட் (31) மற்றும் மெக்ஓடெவ் (11) என சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்த போதிலும் இலங்கையின் பந்துவீச்சாளர்களின் அசத்தலால் 16.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த நெதர்லாந்து அணி 118 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டமையால் இலங்கை அணி 83 ஓட்டங்களால் அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது. பந்துவீச்சில் நுவன் துஷார 3 விக்கெட்டுக்களையும், வனிந்து மற்றும் பத்திரன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

மேலும் இவ் 9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணி பெற்றுக் கொண்ட முதல் வெற்றி இது என்பதுடன் குழு நிலையில் 3 புள்ளிகளை பெற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் முதல் முறையாக இலங்கை அணி ரி20 உலகக்கிண்ணத் தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறும் சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *