உள்நாடு

இன்னல்கள் நீங்கி விமோசனம் அடைய இறைவனை பிரார்த்திப்போம்..! -ஈதுல் அழ்ஹா வாழ்த்துச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

இலங்கையிலும், பலஸ்தீனம் உட்பட ஏனைய சில உலக நாடுகளிலும் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் இன்னல்களிலிருந்து விமோசனம் பெறுவதற்கு “ஈதுல் அழ்ஹா ” பெருநாள் தினத்தில் இறைவனை இறைஞ்சுவோமாக என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவரது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் அரேபியப் பாலைவனத்தில், மக்காவிலும் அதனை சூழ உள்ள பிரதேசங்களிலும் நபி இப்ராஹீம் (அலை), நபி இஸ்மாயில் (அலை), அன்னை ஹாஜரா ஆகியோர் மேற்கொண்ட அளப்பரிய அர்ப்பணிப்பை மையப்படுத்தியதாக உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் “ஈதுல் அழ்ஹா” பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.
ஆண்டுதோறும் உலகளாவிய முஸ்லிம்கள் பல்வேறு சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் முகம் கொடுத்தவாறு பெருநாட்களைச் சந்தித்து வருகின்றனர்.

இலங்கையிலும் முஸ்லிம்களுக்கு எதிரான இன ரீதியான செயல்பாடுகள் இன்னும் முற்றாக நீங்கி விடவில்லை. பலஸ்தீனத்தில் காஸா உட்பட சில பிரதேசங்களில் அமெரிக்கா முதலான வல்லரசுகளின் ஒத்துழைப்புடன் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இன ஒழிப்பு படுகொலைகளும், பேரழிவுகளும் தொடர்ந்த வண்ணமு ள்ளன.

இவ்வாறான சூழ்நிலையில் உலகில் அமைதி நிலவவும், நாம் அனைவரும் ஈருலகிலும் ஈடேற்றம் பெறவும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *