உள்நாடு

நீர்கொழும்பு கடலில் நீராடச் சென்ற இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நீர்கொழும்பு – குடாபாடு மீனவர் துறைமுகத்திற்கு அருகில், நேற்று (14) வெள்ளிக்கிழமை கடலில் நீராடச் சென்ற இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நீர்கொழும்பு – விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் இரு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று, நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர். ஐந்து மாணவர்கள் நேற்று (14) குடாப்பாடு கடலில் நீராடச் சென்ற நிலையில், அவர்களில் இருவர் கடலில் மூழ்கியுள்ளனர். ஏனையவர்கள் மூழ்கிய இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.

எனினும், இம்முயற்சி சாத்தியமாகாததால் பிரதேசவாசிகளில் சிலபேர், கடும் முயற்சி செய்து மூவரைக் காப்பாற்றியுள்ளனர். இருப்பினும், இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நீர்கொழும்பு கடற்கரைத் தெருவைச் சேர்ந்த யோகநாதன் நிதிஷ் (வயது – 17) மற்றும் அஸரப்பா வீதியைச் சேர்ந்த ராஜதுரை அரவிந்தன் (வயது – 17) ஆகிய இரு மாணவர்களே உயிரிழந்தவர்களாவர்.

இறந்தவர்களின் சடலம், நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

(ஐ.ஏ.காதிர் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *