உள்நாடு

சிலாபத்தில் இரகசிய சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

சிலாபம் – ஜேம்ஸ் வீதியில் மேற்கொள்ளப்பட்ட அவசர அகழ்வாராய்ச்சியின் போது, பழைய சுரங்கப்பாதையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர்கள் குழுவொன்று, பராமரிப்பு நோக்கத்திற்காக அவசர அகழ்வை மேற்கொண்ட போதே, இந்த சுரங்கப்பாதையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சுரங்கப்பாதைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் செங்கல் சுவரின் ஒரு பகுதியும், தோண்டப்பட்ட இடத்தில் மிகத் தெளிவாகக் காணப்பட்டதாக ஊழியர்கள் குழு தெரிவித்தனர். தற்போதைய சிலாபம் மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ள கட்டிடம், டச்சு காலத்தில் சிறைச்சாலையாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்தச் சிறைச்சாலையில் இருந்து சிலாபம் துறைமுகம் வரை இரகசிய சுரங்கப்பாதை இருந்ததாக, தொல்லியல் பதிவுகள் இருப்பதாக, தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர் டேவிட் கயான் இந்திக்க தெரிவித்தள்ளார்.

இந்தச் சுரங்கப்பாதையின் பாகங்கள், இதற்கு முன்னரும் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டதாகவும், ஆனால் இது தொடர்பாக முறையான அகழ்வாராய்ச்சி எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *