உள்நாடு

குருநாகல் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம்- ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் பங்கேற்பு

குருநாகல் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (11) வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் மற்றும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சமன்பிரிய ஹேரத் ஆகியோரின் இணைத் தலைமையில் , மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

அதன்போது கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், பெருந்தெருக்கள், காணி, வீடமைப்பு, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்குத் துரிதகதியில் தீர்வுகளை வழங்குவது குறித்து ஆராயப்பட்டது.

அரசியல் வேறுபாடுகள் மற்றும் அரசியல் சார்பு நிலைப்பாடுகளுக்கு அப்பால் பொதுமக்களுக்கு சேவையாற்றுவதன் முக்கியத்தை வலியுறுத்திய ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள், பொதுமக்களுக்குச் சேவையாற்றும் விடயத்தில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் எந்தவொரு அதிகாரியும், எந்தநேரத்திலும் அதுதொடர்பில் தன்னைச் சந்திக்க வர முடியும் என்றும், அவ்வாறான சிக்கல்களைத் தீர்த்துவைப்பதற்கு தான் தயாராக இருப்பதாகவும் ஆளுனர்  தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

மாகாணத்தில் வழங்கப்படும் ஆசிரியர் நியமனங்கள் மட்டுமன்றி, சிற்றூழியர் நியமனங்கள் உள்ளிட்ட அனைத்து நியமனங்களின்போதும், குறித்த நியமனங்களைப்பெறுவோர் சிக்கல்கள் இன்றி சேவையாற்றுவதற்கான வகையில் அவர்களுக்கான நியமனங்களை வழங்குமாறு தான் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஆளுனர் கெளரவ நஸீர் அஹமட்  சுட்டிக்காட்டினார்.

மேலும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் திணைக்களப் பிரதானிகள், தங்களது திணைக்களம் தொடர்பான கேள்விகளின்போது அதற்கான விபரங்களை அறிந்தவர்களாகவும், அது தொடர்பில் துரித தீர்மானங்களை எடுக்கக் கூடியவர்களாகவும் இருப்பதன் அவசியத்தையும் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் வலியுறுத்தினார். அத்துடன் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ள விடயங்களை முன் கூட்டியே எழுத்து வடிவில் சமர்ப்பிக்குமாறும் ஆளுனர் வலியுறுத்தினார்.

இலங்கையின் கேந்திர முக்கியத்துவமிக்க இடத்தில் அமைந்துள்ள குருநாகல் மாவட்டம் என்பது மிக எளிதான முறையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பெறக் கூடிய இடமாக அமைந்துள்ளதாகவும், அந்த சாதக அம்சத்தைப் பயன்படுத்தி குருநாகல் மாவட்டத்தை மாத்திரமன்றி, புத்தளம் உள்ளிட்ட ஒட்டுமொத்த வடமேல் மாகாணத்திலும் சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய வகையில் புதிய பொழுதுபோக்கு அம்சங்கள், புதிய பூங்காக்கள் அமைப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக சுட்டிக்காட்டிய ஆளுனர் நஸீர் அஹமட் அவர்கள், மாகாணத்தின் கல்வி மேம்பாட்டிற்காக புதிதாக 4200பேருக்கும் மேல் ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குருநாகல் மாவட்டத்தில் காசநோய் பரவும் அபாயம் குறித்து கவனம்செலுத்திய கௌரவ ஆளுனர் அவர்கள், காசநோயின் அபாயம் குறித்தும், அதன் பரவலைத்தடுப்பது குறித்தும் மாகாணம் முழுவதும் ஒரே நாளில் விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் மாகாண சுகாதாரப் பணிப்பாளருக்கு பணிப்புரை வழங்கினார். அதுதொடர்பான செயற்திட்டமொன்றை துரிதமாக தயார்படுத்துமாறும் கௌரவ ஆளுனர்  அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

குருநாகல் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இணைத்தலைவர்களான வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் மற்றும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத், ராஜாங்க அமைச்சர்களாக சாந்த பண்டார, டீ.பி.ஹேரத், நாடாளுமன்ற உறுப்பினர்களான அசங்க நவரத்ன, மஞ்சுளா உள்ளிட்ட அரசியல்வாதிகள் மாகாண பிரதம செயலாளர் தீபிகா குணரத்தின, மாவட்ட அரசாங்க அதிபர் ஏக்கநாயக்க, குருநாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *