உள்நாடு

கொழும்பு மற்றும் புற நகர்ப் பகுதிகளிலுள்ள அனுமதியற்ற கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை

கொழும்பு மற்றும் புற நகர்ப் பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தும் அனைத்து அனுமதியற்ற கட்டிடங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா தெரிவித்துள்ளார்.

அனுமதியற்ற நிர்மாணங்களை அகற்றுவதற்கான சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், இரண்டு வாரங்களுக்குள் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இது தொடர்பான சுற்றறிக்கை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் (10) திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச ஈர நிலப் பூங்கா பங்களிப்புடன் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஆசியாவின் முதல் மாநாடு குறித்துத் தெரிவிக்க இந்த செய்தியாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவர் மேலும் இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது, கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போதுள்ள ஈரநிலங்களை பாதுகாப்பதன் மூலம் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியும். கொழும்பு மாநகரப் பகுதி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் உள்ள சிறிய நீர்வழிகள் மற்றும் பக்கவாட்டு வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளமையே வெள்ளப்பெருக்குக்கான பிரதான காரணமாக இனங்காணப்பட்டுள்ளது.

இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், நகர அபிவிருத்தி அதிகார சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் இணைந்து, கொழும்பு நகரம் மற்றும் புற நகர்ப் பகுதிகளில் வெள்ளக் கட்டுப்பாடு தொடர்பான பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹிரான் பாலசூரிய தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கைக் குறைப்பதற்காக காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் 07 விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் திட்டம் 03 கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும். இந்த திட்டம் குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால திட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது.

கொழும்பிற்கு வெளியே நீர் போக்குவரத்து மேம்பாடு மற்றும் நகர நிலத்தை அலங்கரிக்கும் திட்டம், பலன்கஸ்துடுவ நீரேற்று நிலையத் திட்டம், மழைநீர் நீரேற்று நிலைய வெள்ள வாயில்கள் உட்பட வெள்ள கட்டுப்பாட்டு வசதி செயற்பாடு மற்றும் பராமரிப்புத் திட்டம், ஒருங்கிணைந்த வெள்ள முகாமைத்துவ அமைப்பு மற்றும் நிகழ்நேர கட்டுப்பாட்டுத் தரவு மைய நடைமுறைப்படுத்தல் மற்றும் பராமரிப்புத் திட்டம், பிலியந்தலை முதன்மை அபிவிருத்தித் திட்டத்தின் நீர் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பாராளுமன்றத்தின் மேல் நீர் பிடிப்புப் பகுதியான பத்தரமுல்ல நீர் பிடிப்புப் பகுதியின் நீர் போக்குவரத்து மற்றும் சுற்றாடல் மேம்பாட்டுத் திட்டம் என்பன அந்த 7 திட்டங்களாகும்.

இவற்றில் 02 வேலைத் திட்டங்கள் இவ்வருடத்தில் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிலியந்தலை முதன்மை அபிவிருத்தித் திட்டத்தில் நீர் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பாராளுமன்றத்தின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதியான பத்தரமுல்லை நீர்நிலையில் நீர் போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகை 203 மில்லியன் ரூபாவாகும்.

மேலும், பேலியகொடையில் தற்போதுள்ள நீரேற்று நிலையத்தை மேம்படுத்தும் திட்டமும், இவ்வருடத்தில் பூர்த்தி செய்யப்படும் என, காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹிரான் பாலசூரிய தெரிவித்துள்ளார். வெள்ள அபாயத்தைக் குறைக்கும் நோக்கில் 2019ஆம் ஆண்டு முதல் மாதிவெல தெற்கு மாற்றுப்பாதைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. களு பாலத்தில் முன்மொழியப்பட்ட Gate Mounted Pumps களை நிறுவுதல், நிர்மாண வேலைத் திட்டம் 2021 முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இரண்டு திட்டங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முறையே 10 இலட்சம் ரூபாய் மற்றும் 90 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டங்களுடன், கொழும்பு கால்வாய்களின் பராமரிப்பு மற்றும் புனரமைப்பும் வெள்ளத்தை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜப்பபான் கோர்ஸ் புல், சல்வீனியா, ஆக்கிரமிப்பு செடிகள் என்பதால் கால்வாய்களில் வளர்ந்துள்ள இச்செடிகளை அகற்றி, நகர பொலிதீன் மற்றும் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு, மனித உழைப்பு மற்றும் இயந்திரங்களை பயன்படுத்தி கால்வாய்களை சுத்தம் செய்கின்றனர். இப்பணிகள் ஆண்டுதோறும் செய்யப்பட வேண்டியுள்ளதால், இத்திட்டம் ஆண்டு திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹிரான் பாலசூரிய தெரிவித்தார்.

காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் கொழும்பின் பிரதான கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களைப் பராமரித்தல் மற்றும் புனரமைத்தல் போன்ற தொழிலையும் மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, இந்த நிறுவனம் கொழும்பின் பிரதான கால்வாய்களின் 44 கிலோ மீற்றர்களையும் பராமரிக்கிறது. இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை 295 மில்லியன் ரூபாவாகும்.

இதன்படி, களுஓயா துரோணி கால்வாய்களைப் பராமரித்தல், கால்வாயை அண்டிய கால்வாய்க் கரைகளைப் பாதுகாத்தல், புதிய கரைகளை அமைத்தல், லுனாவ கால்வாய்ப் பராமரிப்பு, லுனாவ களப்பு, பழைய ஒல்லாந்து கால்வாய் மற்றும் அதனுடன் இணைந்த நீர் பராமரிப்பு ஆகியன இதன் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

 

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *