உள்நாடு

புதுடெல்லியில் நடைபெறுகின்ற சர்வதேச கல்வி மாநாட்டிற்கு ராஜாங்க கல்வி அமைச்சரோடு கலாநிதி இல்ஹாம் மரைக்கார் பயணமானார்.

புதுடெல்லியில் இடம் பெறும் தரமான கல்விக்கான சர்வதேச மாநாட்டில் இலங்கை கல்வி இராஜாங்க அமைச்சர் தலைமையில் சென்ற குழுவினரோடு கலாநிதி இல்ஹாம் மரைக்காரும் இணைந்து கொண்டார்.

இந்திய தலைநகரான புது டெல்லியில் மே மாதம் 26 ம் திகதி முதல் 30 ம் திகதி வரை “தரமான கல்விக்கான சர்வதேச மாநாடு -2024 ” இடம் பெறுகின்றது. புதுடெல்லியில் இயங்கிவரும் டொக்டர் கலாம் சர்வதேச ஒன்றியம், தரமான கல்விக்கான சர்வதேச அமைப்பு மற்றும் தெற்காசிய சர்வதேச அமைப்பு என்பன இணைந்து இந்த சர்வதேச மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தன.

இந்த மாநாட்டில் இலங்கையிலிருந்து கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த குமார் தலைமையில் 25 துறை சார் நிபுணர்கள் பங்கெடுத்துள்ளனர். உலகலாவிய நவீன கற்பித்தல் முறை, ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை எவ்வாறு மேம்படுத்தல், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விஷேட புதிய கல்வித்திட்டம் மற்றும் திறன் சார்ந்த கல்வித் திட்டத்தின் தொலை நோக்கு என்பனவற்றுடன் பிரதான தலைப்புக்களில் இந்த மாநாட்டின் அமர்வுகள் இடம் பெற்றன.

தேசிய சிறுவர் பாதுகாப்பு கமிஷனின் தலைவர் எம்.உதயகுமாரன், மேல் மாகாண முன்பள்ளி பாடசாலை பணிப்பாளர் மற்றும் முக்கிய பிரதி நிதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இரு நாள் கண்காட்சியும், மற்றைய இரு தினங்கள் முக்கிய தலைப்புக்களில் கலந்துரையாடல்களாகவும் இந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. பிரதம அதிதியின் உரையினை இலங்கை கல்வி ராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் நிகழ்த்தியுள்ளார்.

இதே போன்று சிறப்பு சொற்பொழிவினை இலங்கை அமேசன் கல்வி நிலையம் மற்றும் அமேசன் பல்கலைக்கழகத்தின் நிர்வாக பணிப்பாளர் கலாநிதி இல்ஹாம் மரைக்கார் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை புதுடெல்லியில் உள்ள முன்மாதிரி பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகளை கண்டறியும் வகையில் கல்வி கள சுற்றாலா ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலாவின் நோக்கமானது, முன்மாதிரி பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகளை கண்டறிந்து அதனை திட்டமாக வகுத்து இலங்கையிலும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட உள்ளமை முக்கிய அம்சமாகும். தரமான கல்விக்கான சர்வதேச மாநாட்டில் பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *