உள்நாடு

“ஊழல்வாதிகளையும், திருடர்களையும் விரட்டியடித்து இந்நாட்டு மக்களுக்கான தூய்மையான ஆட்சியை எமது தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் வெகு விரைவில் உருவாக்குவோம்”.- இப்திகார் ஜமீல்

ஊழல்வாதிகளையும் திருடர்களையும் விரட்டியடித்து இந்நாட்டு மக்களுக்கான தூய்மையான ஆட்சியை எமது தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் வெகு விரைவில் உருவாக்குவோம். மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை செய்ய ஐக்கிய மக்கள் சக்தியை பலப்படுத்த வேண்டும் என பேருவளை ஐ.ம.சக்தி பிரதம அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான அல்-ஹாஜ் இப்திகார் ஜமீல் கூறினார்.

பேருவளை சீனன்கோட்டையில் உள்ள ஐ.ம.சக்தி பேருவளை பிரதான காரியாலயத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் தலைமை வகித்து பேசும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பெருமளவிலான கட்சி ஆதரவாளர்கள் பங்கு பற்றியதோடு பேருவளை பகுதியைச் சேர்ந்த பொதுஜன பெரமுன கட்சி பிரபல ஆதரவாளர்கள் இருவரும்,பேருவளை பிரதேச சபை தேர்தலில் ஸ்ரீ.ல.சு. கட்சி சார்பில் போட்டியிட்ட உள்ள பிரபல ஆதரவாளர்களும் இதன் போது ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டமை விசேட அம்சமாகும்.இந்த நால்வரையும் இப்திகார் ஜமீல்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எம்.அம்ஜாத்,ஐக்கிய மக்கள் சக்தி நிறைவேற்றிக் குழு உறுப்பினர்களான டொக்டர் ரூமி ஹாஷிம்,அல்-ஹாஜ் இபாம் ஹனபி நகர சபை முன்னாள் உப தலைவர் ஹஸன் பாஸி ஆகியோர் வரவேற்றனர்.

கட்சியின் அவிசாவளை அமைப்பாளர் நிரோசன் பாதுக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்‌.எம்.அஸ்லம் ஹாஜியார் விசேட பேச்சாளராக கலந்து கொண்ட இக் கூட்டத்தில் இப்திகார் ஜமீல் மேலும் கூறியதாவது-

ஜனாதிபதி தேர்தலோ அல்லது பொதுத் தேர்தலோ நடைபெற்றால் அதில் ஐக்கிய மக்கள் சக்தி வரலாறு காணாத வெற்றியீட்டும். அதை உணர்த்த மாற்றுக் கட்சியினர் சஜித் பிரேமதாஸவின் நேர்மையான,தூய்மையான சக்தி மிக்க தலைமைத்துவத்தை ஏற்று எம்மோடு இணைந்து வருகின்றனர்.

யார் என்ன சொன்னாலும் எவர் எதைச் செய்தாலும்,எமது கட்சி மீது,எமது தலைவர் மீது சேறு பூசினாலும் நடைபெறும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வரலாறு காணாத மாபெரும் வெற்றியை பெற்றுக் கொள்ளும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

பொதுஜன பெரமுனவும்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பல பிரிவுகளாக பிரிந்துள்ளன.ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் ஆதரவில்லை. ஜே‌.வி.பியினர் ஜனாதிபதியாகவோம்,ஆட்சி அமைப்போம் என கனவு காண்கின்றனர்.

இந்த நிலையில் எமது தலைவர் சஜித் பிரேமதாஸ மீது மக்கள் ஆதரவு பெருகியுள்ளது. எனவே ஊழல்வாதிகளையும் திருடர்களையும்,வாய்ப் பேச்சு வீரர்களையும் விரட்டியடித்து சஜித் பிரேமதாஸ தலைமையில் ஆட்சி அமைக்க நாம் ஒன்றுபட்டு ஒற்றுமையாக செயல்படுவோம்.

நாட்டை நாசமாக்கிய தலைவர்களை மக்கள் வீதிக்கு இறங்கி விரட்டியடித்தனர். சஜித் பிரேமதாஸ தலைமையிலான தூய்மையான ஆட்சியை இன்று முழு நாடும் எதிர்பார்த்துள்ளது.

பேருவளையில் பொதுஜன பெரமுனை இன்று செத்து மடிந்து விழுகிறது.மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று எந்தவிதமான சேவைகளும் செய்யவில்லை. பொய் வாக்குறுதிகளை மக்கள் முன் வைத்தார்கள். அவர்கள் எப்படி மக்கள் முன் வந்து வாக்குக் கேட்பது.

தேர்தல் நெருங்கும்போது பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் இன்னும் இன்னும் எம்மோடு இணைவார்கள். அவர்களை நாம் அன்போடு வரவேற்போம் என்றார்.


(பேருவளை பி.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *