உள்நாடு

கம்பஹா மாவட்ட மூத்த ஆலிம்கள் கௌரவிப்பு; – மாபெரும் பிரமாண்டமான சிறப்பு நிகழ்வு வத்தளை ஹுணுப்பிட்டியவில்.

அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா – கம்பஹா மாவட்ட மூத்த ஆலிம்களை கௌரவித்தல் நிகழ்வு, வத்தளை – ஹுணுப்பிட்டிய, ஹெவன் கேட் பென்கட் ஹோல் (Heavens Gate Banquet Hall) வரவேற்பு மண்டபத்தில், (23) வியாழக்கிழமை வெகு விமர்சையாக இடம்பெற்றது.

கம்பஹா மாவட்டத்தில் இயங்கும் மினுவாங்கொடை, நீர்கொழும்பு, திஹாரிய, கஹட்டோவிட்ட, பஸ்யாலை, மல்வானை, பூகொடை, வத்தளை ஆகிய எட்டு கிளைகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த ஆலிம்கள் 56 பேர், இம்மாபெரும் சிறப்பு நிகழ்வில் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

மூத்த உலமாக்கள் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்ட இப்பொன்னான சிறப்பு நிகழ்வை, கம்பஹா மாவட்ட அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா ஒழுங்கு செய்திருந்தது. கம்பஹா மாவட்ட தலைவர் அஷ்ஷெய்க் நுஹ்மான் இன்ஆமி, செயலாளர் அஷ்ஷெய்க் ஸைபுல்லாஹ் இஹ்ஸானி, பொருளாளர் அஷ்ஷெய்க் ஷாபி ஹுஸைன் நழீமி ஆகியோர் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்களின் அயராத பாரிய உழைப்பின் ஒரு பணியாக இம்மாபெரும் மூத்த ஆலிம்களுக்கான சிறப்பு கௌரவ நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஜம் இய்யாவின் உப தலைவர்களில் ஒருவரான அஷ்ஷெய்க் எம்.ஜே. அப்துல் ஹாலிக் பிரதம அதிதியாகவும், உப தலைவர்களில் ஒருவரான அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். றிழா விசேட அதிதியாகவும் இதில் பங்கேற்றிருந்தனர்.

ஜம் இய்யாவின் செயற்குழு உறுப்பினரும், பேருவளை ஜாமிஆ நழீமிய்யாவின் முதல்வருமான அஷ்ஷெய்க் அகார் மொஹமத், பிரதம விசேட பேச்சாளராகக் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.

கௌரவ அதிதிகளாக , அஷ்ஷெய்க் எம்.ரீ.எம். தௌஸீர், அல்ஹாஜ் மொஹமத் பாயிஸ் ஆப்தீன், அல்ஹாஜ் எம்.எச்‌.இஸட்.எம். மர்சூக், அல்ஹாஜ் எல்.ஐ.ஏ.எம். ஸப்வான், அல்ஹாஜ் அஹமட் இஸ்மாயீல் மொஹமத் அஷ்கர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் பல மூத்த ஆலிம்களும், இளம் ஆலிம்களும் இம்மாபெரும் பொன்னான நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.

   

( ஐ. ஏ. காதிர் கான் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *