உள்நாடு

வெள்ளி விழா காணும் ஊடகவியாலாளர் எம்.ஏ.ஏ.காசிம்..!

கிண்ணியாவை பிற்பிடமாகவும்.புத்தளம் – கொத்தாந்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் முகம்மது அனிபா அப்துல் காசிம் ஊடகப் பயணத்தில் 25 வருடத்தை பூர்த்தி செய்துள்ளார்.

1999 ஆம் ஆண்டு தினக்குரல் பத்திரிகையின் பிராந்திய செய்தியாளாராக ஊடகத்துறையில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், தற்போது அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகவியலாளராக கடமையாற்றி வருகின்றார்.

அத்துடன் 2007 ஆம் ஆண்டு முதல் சக்தி எப்.எம் புத்தளம் பிராந்திய செய்தியாளாராகவும் 2009 ஆம் ஆண்டு முதல் சக்தி Tv News 1st புத்தளம் பிராந்திய செய்தியாளாராகவும் கடமையாற்றி வருகின்றார்.

புத்தளம் மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை இணங் கண்டு அதனை காணொளியாக ஒளிப்பதிவு செய்து, அறிக்கையிட்டு வருவதுடன் அவரது செய்தி அறிக்கை மூலம் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

மேலும், மஹாராஜா நிறுவனம் முன்னெடுத்து வருகின்ற “கம்மெத்த” எனும் திட்டத்தின் ஊடாக இவரது முயற்சியால் புத்தளம் மாவட்டத்தில் உள்ள தமிழ் மொழி பாடசாலைகளிலும், தமிழ் பேசும் மக்கள் வாழும் சில கிராமங்களிலும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

புத்தளம் மாவட்ட செய்தியாளர் சங்கத்தின் செயலாளாராகவும், உறுப்பினராகவும் செயற்பட்ட காலத்தில் புத்தளத்தில் இருந்து வெளியான “புத்தெழில் ” எனும் பத்திரிகை வெளிவருவதற்காக முன்நின்று உழைத்தவர்களில் இவரும் ஒருவராவார்.

புத்தளம் மாவட்ட சுதந்திர செய்தியாளர் சங்கம், ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் என்பவற்றின் பொருளாளரான இவர் ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார். இவரின் ஊடகத்துறையைப் பாராட்டி பல்வேறு அமைப்புக்களினால் கௌரவிக்கப்பட்டமை என்பது குறிப்பிடத்தக்கது.

 

(ரஸீன் ரஸ்மின்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *