உள்நாடு

ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அனுதாபம்.

ஈரானிய ஜனாதிபதி கலாநிதி இப்ராஹீம் ரயிஸியின் சோகமயமான இழப்புக்கு இதயத்தின் ஆழத்திலிருந்து ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாக அன்னாரின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஜனாதிபதி கலாநிதி செய்யித் இப்ராஹிம் ரயீசி, ஹெலிகொப்டர் பயணத்தின்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை அளித்தது. நான் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் இலங்கையர்களும் இந்தக் கவலையைப் பகிர்ந்து கொள்வதில் என்னுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி இப்ராஹிம் ரயீசியின் இந்த திடுக்கிடும் மரணம் குறித்து நாங்கள் மிகுந்த வருத்தமும், திகைப்பும் அடைகிறோம். வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தில் இது நிகழ்ந்திருக்கின்றது. அவர் ஒரு கடுமையான வகிபாகத்தைக் கொண்டிருந்தார் ; பிராந்திய மற்றும் உலகளாவிய அளவில் அவர் உயர்ந்தோங்கி நின்றார்.அச்சமடையாத, ஆட்டம் காணாத, எதற்கும் அறவே அசைந்து கொடுக்காத , வலிமையான நிலைப்பாட்டிலிருந்த அவர் பின்னடைவைக் கண்டதேயில்லை.

ஆசியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பிராந்திய நெருக்கடிகளுக்கு துணிச்சலுடன் முகம் கொடுத்த உறுதியான தலைவர் அவர். தற்பொழுது அவரது நாடும்,பலஸ்தீனமும் எதிர்கொள்ளும் துன்பமயமான போர்ச் சூழலைக் கண்டு அவர் துவண்டுவிடவில்லை. இலங்கையின் நண்பராக இருந்தார். ஒரு மாதத்திற்கு முன்னர்தான் இலங்கைக்கு விஜயம் செய்து பாரிய அபிவிருத்தித் திட்டமொன்றை ஆரம்பித்து வைத்திருந்தார்.

இந்த தருணத்தில், நாமும் பயங்கரமான அனுபவமொன்றை நினைவு கூர்கின்றோம். எங்கள் கட்சியின் விருப்பத்திற்குரிய. ஸ்தாபகத் தலைவர், முன்னாள் அமைச்சர், மர்ஹூம் எம்.எச். எம்.அஷ்ரப், ஹெலிகொப்டரில் தனது சொந்தப் பிரதேசத்திற்குப் பயணிக்கும் போது மர்மமான முறையில் இதேபோன்ற நிலைமைக்குள்ளாகி உயிரிழந்தார்.

ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் ஜனாதிபதி ரையிசியுடன் ஹெலிகொப்டர் விபத்தில் இறந்த மற்றவர்களின் திடீர் மறைவுக்கும் நாங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அமைச்சர் அப்துல்லாஹியனும், அவரது அரசாங்கத்துடன் இணைந்து இருதரப்பு உறவுகளை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

மறைந்தவர்களின் குடும்பத்தினருக்கும், ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கும், இலங்கையில் உள்ள அதன் தூதரகத்தினருக்கும்எங்களது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.அவர்களுக்கு அல்லாஹ் ஜென்னத்துல் பிர்தௌஸ் என்ற உன்னதமான சுவன பாக்கியத்தை வழங்குவானாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *