உள்நாடு

இ.போ.ச சாரதி சடலமாக மீட்பு…!

நிகவெரட்டிய – கந்தேகெதர காட்டுப்பகுதிக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் (19) மீட்கப்பட்டுள்ளதாக நிகவெரட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

நிகவெரட்டிய, ஹூலுகல்ல பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.எம்.ருவன் சதுரிக (வயது 45) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் இலங்கை போக்குவரத்து சபை சாரதி என விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் மனைவி தொழில் நிமித்தம் வெளிநாட்டில் இருப்பதுடன், பிள்ளைகள் இருவரும் வேறொரு இடத்தில் தங்கியிருந்து கல்வி கற்று வருவதாகவும், குறித்த நபர் தனியாக வசித்து வந்ததாகவும் விசாரணைகளின் போது மேலும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நிகவெரட்டிய பிரதேச மரண விசாரணை அதிகாரி ரஞ்சித் தர்மசிறி சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணனையை நடத்தினார். சடலம் பிரேத பரிசோதனைக்காக நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

நிகவெரட்டிய பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் வசந்த ஜயமின குமாரவின் பணிப்புரையின் பிரகாரம் , உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த குணவர்தனவின் மேற்பார்வையில், நிகவெரட்டிய தலைமையகப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் திலக் சுபசிங்க மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(ரஸீன் ரஸ்மின்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *