உள்நாடு

வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி..!

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி மக்களவை தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் 7வது கட்டமாக வருகிற ஜூன் ஒன்றாம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு காங்கிரஸ் சார்பில் அதன் மாநிலத் தலைவர் அஜய் ராய், பி.எஸ்.பி. சார்பில் ஏ. ஜமால் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வாரணாசி தொகுதியில் கடந்த இரண்டு முறை பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014ல் வாரணாசியில் 5.81 லட்சம் வாக்குகளையும் 2019ல் 6.74 வட்சம் வாக்குகளையும் மோடி பெற்றிருந்தார். இதனை தொடர்ந்து மூன்றாவது முறையும் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் களமிறங்கியுள்ளார்.
7 கட்டங்களாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் 4 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதற்காகப் பிரசாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். 3-வது முறையாக வாரணாசி தொகுதியில் பிரதமர்  நரேந்திர மோடி போட்டியிடுகிறார்.
இந்தநிலையில், கங்கை நதியில் சிறப்பு பூஜைகள் நடத்தினார். வேத பட்டர்கள் மந்திரம் ஓத, பிரதமர் நரேந்திர மோடி கங்கை நதியில் மலர்கள் தூவி வணங்கினார். தொடர்ந்து ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கங்கை நதியின் புனிதத்தை எடுத்து கூறினார்.
பிரதமர் மோடி கூறியதாவது:
கங்கை நதியின் தத்துப்பிள்ளைநான். எனது தாய் மறைவுக்குப்பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன். கங்கை என்னை வலுப்படுத்தி தேற்றியது. கங்கை நதி தாயை போல் அனைவரையும் காக்கிறது என்றார். தாயை குறித்து பேசும் போது பிரதமர் மோடி கண்கள் கலங்கின. அவரது குரல் தழு தழுத்தது. மேலும்,140 கோடி மக்களுக்காக நான் உழைக்கிறேன். இது கடவுள் உத்தரவு என்று கூறினார்.
இதற்காக வாரணாசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார்.வேட்பு மனு தாக்கலின் போது, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் நட்டா, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.பிரதமர் மோடியின் வேட்பு மனுவை 4 பேர் முன்மொழிந்து கையெழுத்திட்டனர். அயோத்தி ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை செய்த பண்டிட் ஞானேஸ்வர் சாஸ்திரி முன்மொழிந்தார். பட்டியலினத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி சஞ்சய் சோன்கார் வேட்புமனுவை முன்மொழிந்தார். ஓபிசி சமூகத்தை சேர்ந்த பைஜினாத் படேல், லால்சந்த் குஷ்வாஹா ஆகியோரும் வேட்புமனுவை முன்மொழிந்தனர்.
வருகிற ஜூன் 1-ந்தேதி, 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலின்போது இந்த தொகுதிக்கான வாக்கு பதிவானது நடைபெறுகிறது. இதில், வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியமைக்கும் முனைப்பில் அவர் உள்ளார். இதற்காக வாரணாசி நகரில் பிரதமர் நரேந்திர மோடி  வாகன பேரணியில் ஈடுபட்டார்.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *