உள்நாடு

இலங்கையின் சிவில் அலுவலர்களுக்கான இரண்டாவது திறன் மேம்பாட்டு பயிற்சி இந்தியாவின் நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் ஆரம்பம்..!

இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கான இருவார கால திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம்  இந்தியாவின் உத்தரகாண்ட், முசோரியில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் (NCGG)  2024 மே 13ஆம் திகதி ஆரம்பமாகியது.  இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சின் கீழான இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் (ITEC) குறித்த திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் குறிப்பாக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம், இலங்கை சுங்கம், நிதி, பொருளாதார உறுதிப்பாடுமற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு,  கணக்காய்வு சேவை  ஆணைக்குழு உள்ளிட்ட அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின்  பணிப்பாளர்கள், சிரேஸ்ட பிரதிப் பணிப்பாளர்கள், பிரதிப் பணிப்பாளர்கள், சிரேஸ்ட உதவிச் செயலாளர்கள், உதவி செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் கடமையாற்றும் இலங்கையைச் சேர்ந்த 40 சிரேஸ்ட சிவில் அலுவலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சித் திட்டமானது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சின் ஒத்துழைப்புடன் நல்லாட்சிக்கான தேசிய நிலையத்தால் நடத்தப்படுவதுடன், “’குறைந்தபட்சஅரசு – அதிகபட்ச ஆட்சி’ என்ற கொள்கையின் கீழ் அரசையும் மக்களையும் மேலும் நெருக்கமாக்குவதற்கான டிஜிட்டல் தொழில்நுட்ப முறைமைகளைத் தழுவும் வழிமுறைகள் குறித்தும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் ஆராயப்படும். ஆட்சி முறையினையும் பொது சேவை விநியோகத்தையும் மேம்படுத்துவதற்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கண்டுபிடிப்புகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

அனைவருக்கும் வசிப்பிடம், டிஜிட்டல் பாவனை, கரையோரப் பகுதிகளுக்கான அதீத கவனம் உட்பட அனர்த்த முகாமைத்துவம், சுகாதார காப்பீட்டுத் திட்டம், பொது தனியார் பங்குடமைமை, GeM: ஆட்சி முறைமையில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவருதல், ஆதார் திட்ட அமுலாக்கம்: நல்லாட்சிக்கான ஓர் உந்துகோல், டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு, சுழற்சிப் பொருளாதாரம் மற்றும் தேர்தல் முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இந்தியா மேற்கொண்ட வெற்றிகரமான திட்டங்கள் குறித்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்பவர்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியுள்ளது. இவ்விடயங்கள் குறித்த கற்றல் அனுபவத்தை வளப்படுத்தவும், ஆட்சி முறை மற்றும் சமூக இயக்கவியல் குறித்த நுண்ணறிவினையும் நேரடி அனுபவங்களையும் பெற கள விஜயங்களும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக 26 பெப்ரவரி முதல் மார்ச் 08 வரையில் NCGG நடத்திய திறன் விருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் இலங்கையைச் சேர்ந்த 40 சிரேஸ்ட சிவில் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். இந்திய அரசின் பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சின் கீழான நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை திணைக்களத்தின் ஒரு சுயாதீன நிறுவனமான நல்லாட்சிக்கான தேசிய நிலையமானது, தேசிய மற்றும் சர்வதேச அளவில் பொதுக் கொள்கைகள் மற்றும் ஆட்சிமுறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றது. அந்த அடிப்படையில் இந்திய வெளியுறவுத் துறையுடன் இணைந்து பங்களாதேஷ், கென்யா, தன்சானியா, டுனீசியா, சிசெல்ஸ், கம்பியா, மாலைதீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், லாவோஸ், வியட்னாம், நேபாளம், பூட்டான், மியன்மார், எதியோப்பியா, எரித்திரியா மற்றும் கம்போடியா போன்ற 17 நாடுகளின் சிவில் அலுவலர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகின்றது.

 

(இந்திய உயர் ஸ்தானிகராலயம் -கொழும்பு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *