உள்நாடு

ஜப்பான், தென்னாபிரிக்கா, சுவிட்சர்லாந்து தூதுவர்களுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான சந்திப்பு.

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் திரு. MIZUKOSHI Hideaki அவர்கள், தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் திரு. Sandile Schalk அவர்கள் மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவர் திருமதி. Siri Walt அவர்கள் நேற்று (09) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பில் ஜப்பானியத் தூதரகத்தின் அரசியல் பிரிவுக்கான முதலாவது செயலாளர் MURATA Shinichi, தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் பிரிவுக்கான இரண்டாவது செயலாளர் Zanethemba Tshangela, சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அரசியல் பிரிவுக்கான முதலாவது செயலாளர் Justine Boillat ஆகியோரும், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் டாக்டர் ரிஷ்வி சாலி, தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சரோஜா போல்ராஜ், தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார ஆகிய தோழர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, இலங்கையில் இனங்களுக்கு இடையிலான சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இது பற்றிய தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் மற்றும் தீர்வுக்கான அணுகுமுறைகள் குறித்தும் தூதுக்குழு பிரதிநிதிகள் வினவினர்.

இதன்போது தேசிய மக்கள் சக்தி “தாம் எந்தவொரு நிலையிலும் அரசியலுக்காக இனவாதத்தை பயன்படுத்த தயாரில்லை” என்பதை சுட்டிக்காட்டியது. சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படையில் தேசிய பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு தாம் தயாராக இருப்பதாக வலியுறுத்திய தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள், தேசிய பிரச்சினைக்கு தனித்து ஒரு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியாது எனவும், அது ஏனைய காரணிகளுடன் பிணைந்து காணப்படுவதால் தீர்வினை எட்டும்போது ஒட்டுமொத்த விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியது. இந்த விவகாரங்களில் சர்வதேச சமூகம் கொண்டிருக்கும் அக்கறை குறித்து தேசிய மக்கள் சக்தி தூதுக்குழு பிரதிநிதிகளுக்கு விஷேடமாக நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *