உள்நாடு

புத்தளம் – பாலாவி சமுர்த்தி வங்கி உதவி முகாமையாளர் MTM நியாஸ் காலமானார்…!

புத்தளம் – பாலாவி சமுர்த்தி வங்கியின் உதவி முகாமையாளர் முஹம்மது தாஹிர் முஹம்மது நியாஸ் (வயது 55) இன்று (07) மாலை காலமானார்.

இன்று (07) மாலை சமுர்த்தி வங்கியில் தனது கடமைகளை நிறைவு செய்த பின்னர், புத்தளம் , மன்னார் வீதியில் உள்ள பாரியப்பா மஸ்ஜிதில் இடம்பெறும் புனர்நிர்மாண பணிகளை பார்வையிட சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மஸ்ஜிதில் நிர்மாணப் பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, அங்கு அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் , அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

1995 ஆம் ஆண்டு முதற் தடவையாக சமுர்த்தி நியமனம் வழங்கப்பட்ட போது, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமனம் பெற்ற இவர், புத்தளம் – பாலாவி சமுர்த்தி வங்கியின் உதவி முகாமையாளராக கடமையாற்றி வந்தார்.

சமாதான நீதிவானான இவர், புத்தளம் – மன்னார் வீதியில் உள்ள பாரியப்பா மஸ்ஜிதின் நிர்வாக பொருளாளராகவும் கடமையாற்றி வந்துள்ளார்.

இவர், மூன்று பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரது ஜனாஸா நாளை (08) காலை 9 மணிக்கு புத்தளம் மஸ்ஜிதுல் பகா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அன்னாரது ஒன்றுவிட்ட சகோதரர் புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முகம்மது ஹிசாம் தெரிவித்தார்.

இதேவேளை, மர்ஹூம் நியாஸின் ஜனாஸா புத்தளம் – மன்னார் வீதியில் உள்ள (பாரியப்பா மஸ்ஜிதுக்கு அருகில்) வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

 

(ரஸீன் ரஸ்மின்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *