உள்நாடு

புத்தளத்தில் மக்கள் காங்கிரஸ் கிளைகள் புனரமைப்பு.

புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிளைகள் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனின் பணிப்புரையின் கீழ் வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் என்.டி.எம்.தாஹிரின் தலைமையில்
புத்தளம், வன்னாத்தவில்லு, கற்பிட்டி, மற்றும் முந்தல் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்களால் இந்த பணிகள் யாவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், புத்தளம் நகர சபை, புத்தளம் , வன்னாத்தவில்லு, கற்பிட்டி மற்றும் ஆராச்சிக்கட்டுவ ஆகிய பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு புதிதாக கிளை அமைப்பாளர்கள் மற்றும் இணைப்பாளர்கள் நியமிக்கபட்டுள்ளனர்.

அத்துடன், கிராம மட்டத்தில் கட்சியை வளர்ப்பதற்கு தேவையான ஆலோசனைகள் பெறுவதுடன், ஒவ்வொரு கிராமங்களிலும் 11 பேர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ரிபாஸ் நஸீர் தெரிவித்தார்.

இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள குழுக்களால் அந்தந்தக் கிராமங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி பணிகள் மற்றும் கட்சியின் புனரமைப்பு தொடர்பில் ஆலோசனைகளை பெற்று அதனை தேசியத் தலைவருக்கும், கட்சியின் உயர்பீடத்திற்கும் தெரியப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

கட்சியை மேலும் விஸ்தரிப்பதற்கும், கட்சியை விட்டு விலகி இருப்பவர்கள், புதிதாக கட்சியோடு சேர விரும்புபவர்கள் மற்றும் மக்களின் ஆலோசனைகளை பெறுவதற்கும் இவ்வாறான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

கட்சிக் கிளைகளின் புனரமைப்பு பணகள் நிறைவு பெற்றதும், விரைவில் கட்சியின் தலைவர் உட்பட ஏனைய முக்கியஸ்தர்களும் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் நேரில் விஜயம் செய்யவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(ரஸீன் ரஸ்மின்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *