உள்நாடு

தேசிய மக்கள் சக்தி இன்று இலங்கையின் மிகப்பெரிய அரசியல் பாய்ச்சலுக்கு தயாராகி வருகின்றது. – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க

இன்றைய மேதினம் மிகவும் தீர்மானகரமானதாகும். இது ஊழல்மிக்க பிரபுக்கள் அமைப்பின்கீழ் நடாத்தப்படுகின்ற இறுதி மேதினம் என நாங்கள் நினைக்கிறோம். செப்டெம்பர் 17 இற்குப் பின்னர் ஒக்டோபர் 17 இற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விப்பதற்கான அனைத்துத் திட்டங்களையும் நாங்கள் வகுத்து முடித்துவிட்டோம். 2025 மே தினம் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழேயே நடைபெறும். கொழும்பு மே தினத்தை நடாத்த தேசிய மக்கள் சக்திக்கு இடவசதி போதாதென்பதை நாங்கள் உணர்ந்தோம். பொதுவாக நாங்கள் யாழ்ப்பாணத்தில் நடாத்துகின்ற மே தினத்திற்கு மேலதிகமாக அநுராதபுரம், மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் மூன்று பிரதான மே தினங்களை நடாத்த தீர்மானித்தோம். அநுராதபுரம், மாத்தறை, கொழும்பு ஆகிய எல்லா இடங்களையும் ஒரே மக்கள் வெள்ளமாக மாற்றி தேசிய மக்கள் சக்தியின் மே தினத்தில் மக்கள் பங்கேற்றுள்ளார்கள்.

மே தினத்தைக் கொண்டாடுவது நாங்கள் மாத்திரமல்ல. செத்தம் வீதியில் நடாத்தப்படுகின்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மேடையில் மகிந்த ராஜபக்ஷவின் முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், கோட்டாவின் அமைச்சர் நாலக்க கொடஹேவா, ரணிலின் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச, கயந்த கருலணாதிலக, கிரிஎல்ல, ராஜித போன்ற கும்பல் இருக்கின்றது. மைத்திரிபால சிறிசேனவின் முன்னாள் அமைச்சர் டிலான் பெரேராவும் இருக்கிறார். கெம்பல் மைதானத்திற்குச் சென்றால் மகிந்த ராஜபக்ஷ, அவருடைய அரசாங்கத்தில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கோட்டாவின் அரசாங்கத்தில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அங்கே இருக்கிறார்.

கள்ளன் – பொலீஸ் விளையாட்டில் ஈடுபட்டு இருபக்கமாக பிரிந்தார்களோ தெரியவில்லை. மாளிகாவத்தைக்குச் சென்றால் அங்கே மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சர் ஹரீன் பர்ணாந்து, மனுஷ நாணாயக்கார, ரணிலின் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள் இருக்கிறார்கள். கிருளப்பனை பக்கத்தில் அநாதைகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் நான்கு இடங்களில் இருக்கையில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் மாத்திரம் நான்கு இடங்களில் இந்த நாட்டை மாற்றியமைப்பதற்காக ஏகோபித்து, ஒற்றுமையாக, ஐக்கியமாக ஒரு சக்தி என்றவகையில் அணிதிண்டிருக்கிறோம். இலங்கையில் முதல்த்தடவையாக பொதுமக்களின் கைகளுக்கு அதிகாரம் மாறுவதற்கான செயலாற்றி வருகிறோம். அதனால் ஊழல்மிக்க பிரபுக்கள் வர்க்கம் பதற்றமடைந்து தலைகால் புரியாமல் இருக்கிறார்கள்.

ஐ.ம.ச. என்பது முதிர்ச்சியற்ற, பச்சிளங் குழந்தைபோன்ற குழுவொன்றாகும். காலையும் மாலையும் அழுதுபுலம்புவதை சகித்துக் கொண்டிருக்க முடியாது. மே தினத்திற்காக நாங்கள் கேட்ட இடம் கிடைத்ததென்ற அவலக்குரல். தற்போது ஒருமாத காலமாக விவாதம் விவாதம் என புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ம.வி.மு. இற்கும் இடையிலான விவாதம் என்ற புலம்பல். நாங்கள் விவாதத்திற்காக ஒழுங்கமைந்தவகையில் செயலாற்றி தோழர் நளிந்த ஜயதிஸ்ஸவை இணைப்பாளராக நியமித்து ஐ.ம.ச. பொதுச் செயலாளருக்கு நான்கு தினங்களை கடிதம் மூலமாக அறிவித்தோம். மே 07,09,13,14 ஆகிய தினங்களில் ஒன்றுவீதம் விவாதத்தை நடாத்த பொருத்தமான திகதியை தெரிவுசெய்து அறிவிக்குமாறும், அதன் பின்னர் விவாதம் நடாத்தப்படுகின்ற விதம் பற்றி கலந்துரையாடுவோம் எனக் கூறியதும் அந்த நான்கு நாட்களிலும் வேலையாம்.

நாங்கள் அவ்விதமாக நடந்துகொள்ளும் போது அவர்கள் மொணறாகல பிரதேசத்தின் பாடசாலையொன்றின் ஆரம்பப் பிரிவின் பிள்ளைகளைச் சூழவைத்துக்கொண்டு “நாங்கள் விவாதத்திற்கு பயமில்லை, கோழைகள் போல் தப்பிச்செல்ல மாட்டோம், நான் எந்தவொரு விவாதத்திற்கும் தயார்” எனக் கூறுகிறார். மயானத்திற்கு அருகில் போகும்போபது அதிகமாக பயந்தவர் உரத்த குரலில் கத்துவது போல். இந்த விவாதம் பற்றி நான் மேடையில் பேசுகின்ற முதலாவது தருணம் இதுவாகும். இந்த விவாத நோயைக் குணப்படுத்த வேண்டும். தோழர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த 24 ஆந் திகதி மே 20 ஆந் திகதிக்கு முன்னர் திகதியொன்றை அறிவிக்குமாறும் திட்டவட்டமாக நடந்துகொள்வோம் எனவும் அறிவித்தார். நாங்கள் கூறிய நான்கு நாட்களில் முடியாவிட்டால் அவர்களிடம் தினமொன்றைக் கேட்டோம். அவர்களிடம் அவர்களுக்கே உரித்தான அரசியல் நிகழ்ச்சிநிரலொன்று கிடையாது.

தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் எம்மீது நிலவுகின்ற மக்களின் விருப்பத்தை மக்கள் சக்தியாக மாற்றுகின்ற திட்டமொன்றை தயாரித்து அமுலாக்கினோம். நாங்கள் சரியானவகையில் கிராமங்களை ஒழுங்கமைத்தோம். இங்கே இருக்கின்ற பெரும்பாலானவர்கள் வட்டார சபையொன்றின் அங்கத்தவர்களாவர். எமது நாட்டின் பெண்கள் அரசியல் தொடர்பில் குறைவாக ஆர்வம் காட்டுவதால் அரசியல் மாற்றமொன்றிற்காக அவர்களை பங்கேற்கச் செய்விப்பதற்காக பெண்கள் அமைப்புக்களை கட்டியெழுப்பி மாவட்ட மாநாடுகளை நடாத்தி துல்லியமாக வேலைகளை நிறைவுசெய்தோம். இலங்கையின் மிகவும் ஒழுங்கமைந்த பெண்கள் இயக்கம் தேசிய மக்கள் சக்தியால் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

அதைப்போலவே எமது நாட்டின் நீதிமன்றங்களில் 80% இற்கு அதிகமான அளவில் தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்புகள் தாபிக்கப்பட்டு விட்டன. பொறியியலாளர்களை நிறுவன மட்டங்களிலும் மாவட்ட மட்டங்களிலும் ஏற்பாடுசெய்து ஜூலை 01 ஆந் திகதி அவர்களின் மாநாட்டினை நடாத்துவோம். இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவானது ஜனரால்களிலிருந்து சாதாரண சிப்பாய்வரை பலம்பொருந்திய வகையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அதனைக் காப்பியடித்து சஜித் அமைத்ததன் பிரதானி பற்றி பொன்சேகா அவர்கள் அரிசி களவெடுத்ததால் அகற்றப்பட்டவர் எனக் கூறினார். எமது நாட்டின் நாகரிகத்திலும் வரலாற்றிலும் அளப்பரிய பணியை ஆற்றிய சங்கைக்குரியவர்களுடன் கலந்துரையாடி மிகப்பெரிய பிக்குமார்கள் இயக்கத்தை கட்டியெழுப்பி ஜூலை மாதத்தின் இறுதியளவில் பிரமாண்டமான பிக்குமார்கள் மாநாட்டினை நடாத்த தயாராகி வருகிறோம். ஏனைய அருட்தந்தைமார்களுடனும் குருக்கள்மார்களுடனும் கலந்துரையாடி வருகிறோம். இதன்படி தேசிய மக்கள் சக்தி மிகவும் ஒழுங்கமைந்த ஒரு சக்தியாக எம்மால் கட்டியெழுப்பப் பட்டுள்ளது.

நாங்கள் இந்த அரசியல் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் செயலாற்றி ஆங்காங்கே பிறர் பற்றிய ஒருசில விடயங்களையும் கூறிவருகிறோம். ஏனைய மேடைகளில் எம்மைப் பற்றி அடிக்கடி பேசிவருவதோடு அவர்களைப் பற்றி ஒருசில விடயங்களைக் கூறிவருகிறார்கள். அவர்களுக்கு அவர்களைப் பற்றிக்கூறுவதற்கு எதுவுமே கிடையாதென்பதால் எம்மைப் பற்றியே பிரலாபித்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் ஒட்டுமொத்த அரசியலையும் தேசிய மக்கள் சக்தியை கேந்திரப்படுத்தி நெறிப்படுத்துவதில் நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம். நாட்டைப் பற்றி பாரியளவில் பார்த்துக்கொண்டிருக்கின்ற புலம்பெயர் சமுதாயத்தை விளித்துப்பேச அவர்கள் போவதில்லை.

நிவ்யோர்க்கிற்குப் போய் அரசி பங்கிட்டு மக்கள் வெள்ளத்தை திரட்ட முடியாதல்லவா! அதனைத் தவிர ஏனைய அனைத்துமே எமக்குப் பின்னால் வருகின்ற அரசியலாக மாறி இருக்கின்றது. வெற்றிப் படிநிலையை நோக்கி தேசிய மக்கள் சக்தியை உயர்த்திவைத்து இலங்கையின் அரசியல் பற்றிய பலம்பொருந்தி வகிபாகத்தை ஈடேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இளைப்பாறிய பொலீஸார் கூட்டமைவு ஜூன் மாதம் இரண்டாந் திகதி இளைப்பாறிய சிரேட்ட பொலீஸ் உத்தியோகத்தர்களின் தலைமையில் நடாத்தப்டபட திட்டமிடப்பட்டுள்ளது.

இன்னும் மூன்று மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் பிரகடனஞ் செய்யப்பட உள்ளது. நீண்டகாலமாக மக்கள் விடுதலை முன்னணியுடன் முனைப்பாக செயலாற்றி 1995 இல் இருந்து மே தினங்களில் பங்குபற்றியவர்கள் இருக்கிறார்கள். பழைய தாய்மார்கள், தந்தையர், தோழர்கள் அவதூறுகளை தாங்கிக்கொண்டு 3% இற்கு வீழ்ச்சிடைகையில் பொறுமைகாத்து இதனை உயர்த்திப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அந்த கௌரவமும் வீரவணக்கமும் அந்த தோழர்களுக்கு இருக்கின்றது. நாங்கள் வெற்றியை நோக்கிச்செல்ல அது மாத்திரம் போதுமானதாக அமையமாட்டாது. ஏனைய கட்சிகளுக்கு வாக்குகளை அளித்த, ஏனைய கட்சிகளுக்காக உழைத்தவர்கள் எம்மைநோக்கி வரவேண்டும். இங்கே இருக்கின்ற இலட்சக்கணக்கான மக்களை பார்க்கும் போது 2019 இல் எமக்கு வாக்களிக்காமல் பிறருக்கு வாக்களித்த பெருந்தொகையானோர் இருக்கிறார்கள்.

பழைய, எம்மைப் பிடித்துக்கொண்டு இருந்ததைப்போல் பண்டைய மரபுரிமையைப் பற்றிக் கூறுவதற்குப் பதிலாக நிகழ்காலத்தில் உயிர்வாழ வேண்டும். இந்த நாட்டுக்கு புதிய யுகமொன்றை உருவாக்குவதற்காக இலங்கையின் பலம்பொருந்திய மக்கள் இயக்கமொன்றை கட்டியெழுப்பிட வேண்டும். தேசிய மக்கள் சக்தி என்பது ஏனைய கட்சிளுக்கு எதிரான ஒரு கட்சியல்ல. அதைப்போலவே ஆளொருவருக்கு எதிராக கட்டியெழுப்பப்பட்ட இயக்கமுமல்ல. அனைத்து மக்கட் குழுக்களையும் பிரதிநிதித்துவம்செய்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புகின்ற மாபெரும் மக்கள் இயக்கம் இதுவாகும். பழைய கட்சிக் கோபதாபங்கள், கருத்துக்கள், பழைய கருத்தியல்கள், பழைய குப்பைகள் அனைத்தையும் வீசியெறிந்திட வேண்டும். நவீன இலங்கையின் பதிய மறுமலர்ச்சி யுகத்தை உருவாக்கி உலகத்தாருடன் முன்நோக்கிப் பயணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஒருசிலர் கணிப்ப்பீட்டில் கூறுகிறார்கள் 3%, 51% ஆக எப்படி மாறுமென்று. மூன்றரை இலட்சம் நான்கு இலட்சம் வாக்குகளாக காணப்பட்ட நிலைமை எவ்வாறு எழுபது இலட்சமாக மாறுமென கேள்வி கேட்கிறார்கள். அதைவிட சஜித் அருகில் இருப்பதாக கூறுகிறார்கள். அரசியல் என்பது அட்சர கணிதமல்ல. அரசியல் என்பது சமூக விஞ்ஞானமாகும். அரசியல் என்பது அட்சர கணிதமென்றால் 69 இலட்சத்தைப் பெற்ற கோட்டாபய இன்னமும் ஜனாதிபதியாக இருக்கவேண்டும். பாராளுமன்றத்தில் 2/3 ஐ பெற்ற மகிந்த இன்னமும் பிரதமராக இருக்கவேண்டும். இன்று அவர்கள் ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி என்றே கூறுகிறார்கள். அரசியல் என்பது தொடர்வரிசைப்படி மாற்றமடைவதல்ல, பாய்ச்சலாகும்.

தேசிய மக்கள் சக்தி தற்போது இலங்கையின் மிகப்பெரிய அரசியல் பாய்ச்சலுக்கே தயாராகி வருகின்றது. எந்தவோர் அமைப்பும் மேற்கொள்கின்ற மதிப்பாய்வுகளில் தேசிய மக்கள் சக்தி உயர்ந்த இடத்திலேயே நிலவுகின்றது. மதிப்பாய்வுகளை ஒருபுறம் ஒதுக்கிவைத்தாலும் முச்சக்கர வண்டியில் ஏறினால், மருத்துவரிடம் மருந்து வாங்கச் சென்றால், சட்டத்தரணியிடம் வழக்கினை எடுத்துச் சென்றால், சாமான் வாங்க கடைக்குச் சென்றால், பஸ் வண்டியில் அருகில் அமர்ந்துள்ளவரிடம் கதைத்தால் எல்லாதே திசைகாட்டியைப் பற்றியதாகும். மேலே இருக்கின்ற மதிப்பாய்வுகளை ஒருபுறம் வைத்தாலும் மண்ணில் நிலவுகின்ற யதார்த்தம் வெற்றியை நெருங்கிக் கொண்டிருப்பதையே சுட்டிக் காட்டுகின்றது.

வெற்றியை ஆட்டங்கண்ட பல்லைப்போல் எடுத்துக்கொள்வது போதுமானதாக அமையமாட்டாது. உலகில் பாரிய மாற்றங்களை பலம்பொருந்திய அரசாங்கங்களே ஏற்படுத்தின. உலகின் எந்தவொரு நாட்டிலும் புதிய மாற்றம் இடம்பெற்றிருப்பின் அது பலப்பொருந்தி அரசாங்கங்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் கைவைக்கப்போவது சிறியதொரு வேலையில்லை. 76 வருடங்களாக பயணித்துக்கொண்டிருக்கின்ற பாதையை மாற்றியமைப்பதற்காகவே வருகிறோம். 76 வருடகாலமாக பழக்கப்பட்ட அரச பொறியமைப்பொன்று இருக்கின்றது. பழக்கப்பட்ட மக்களும் இருக்கிறார்கள். பழக்கப்பட்ட சமூகமொன்று இருக்கின்றது.

இந்த பாதையில் பயணிக்க நெறிப்படுத்தல் தேவையில்லை. வழமையான பாதையில் போகலாம். இந்த மாற்றத்தைச் செய்யவேண்டுமாயின் முதலில் பெரும்பான்மை மக்களின் அங்கிகாரம் அவசியமாகும். பலம்பொருந்திய மக்கள் சக்தி அவசியமாகும். எதிர்வும் மூன்று மாதங்களில் வீடுவீடாகச் செல்லுங்கள். ஒவ்வொரு பிரஜையையும் சந்தியுங்கள். நாட்டுக்கு ஏற்படுத்தியுள்ள அழிவு பற்றி எடுத்துக் கூறுங்கள். இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்காக தேசிய மக்கள் சக்தியிடம் உள்ள வேலைத்திட்டதை எடுத்துக் கூறுங்கள். கிராமங்கள் தோறும் திசைகாட்டியை வெற்றியீட்டச் செய்விப்பதற்காக மல்லுக்கட்டுகின்ற சமூகமொன்றை உருவாக்குங்கள். அநுராதபுரத்திலும் கொழும்பிலும் மாத்தறையிலும் யாழ்ப்பாணத்திலும் அனைவரையும் ஒன்றுசேர்த்தால் மூன்று இலட்சத்தைவிட அதிகமாகும். இதுவே பலம்பெருந்திய ஊடறுத்தல் படையணியாகும்.

நாங்கள் மாற்றியமைப்பது மரபுரீதியான அரசியலையாகும். இளைஞர் தலைமுறையினருக்கு மரபுரீதியான அரசியல் கசந்து போய்விட்டது. ஒட்டுமொத்த குடும்பமாக அரசியலுக்கு வருகின்ற முறையியலே நிலவுகின்றது. மகன்மார்கள், பாரியார்கள், தம்பிமார்கள் அந்த மேடைகளில் இருக்கிறார்கள். மாளிகாவத்தையில் பாட்டுப்பாட இந்தியாவில் இருந்து கொண்டுவந்திருக்கிறார்கள். அதன்படி ரணிலுக்கு வாக்களிக்கவும் இந்தியாவில் இருந்து கொண்டுவரவேண்டிய நிலையேற்படும். இந்த மேடையில் உள்ள நாம் எவருமே குடும்ப மரபுரிமையால் அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல. அரசியல் மேடைகளில் ஏறியிராத சம்பத் துய்யகொன்த்தா போன்ற முப்படைகளின் உயரதிகாரிகள், மருத்துவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தொழில்வாண்மையாளர்கள் அனைவருமே இந்த மேடைக்கு வருகிறார்கள்.

மானிட உணர்வுகொண்ட எந்த ஒருவருக்கும் திறந்தநிலையிலுள்ள விரிவான மேடைதான் தேசிய மக்கள் சக்தியின் மேடை. பொதுப்பணத்தைக் கோடிக்கணக்கில் திருடிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அந்த மூன்று மேடைகளுக்கும் சென்றால் வீச்சு வலை போட்டு கள்வர்களைப் பிடிக்க இயலும். மாளிகாவத்தைக்குப் போனால் மத்திய வங்கிளை உடைத்தவர்களிலிருந்து அனைவருமே வீச்சு வலையில் அகப்படுவார்கள். கெம்பல் மைதானத்திற்குச் சென்றால் குடும்பத்திலுள்ள அனைவருமே மாட்டிக்கொள்வார்கள். மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கின்ற மரபுரீதியான அரசியலை மாற்றியமைத்து அந்த செல்வத்தை புனிததலத்திற்கு காணிக்கையாகக் கொடுத்த ஆதனத்தைப்போல் பாதுகாக்கின்ற புதிய அரசியல் கலாசாரம், மரபினை நாங்கள் கொண்டுவருவோம்.

அந்த பொருளாதாரத்தினால் நாடு முன்நோக்கி நகருமென அவர்கள் சதாகாலமும் கூறினார்கள். இந்த பொருளாதாரப் பயணத்தினால் நாடு நாசமடையுமென நாங்கள் பல தசாப்தங்காளக கூறிவந்தோம். மக்களை அதனை அவ்வாறே விளங்கிக்கொள்ளவில்லை. லீ குவான் யூ, மஹதீர் மொஹமட் வந்து சிங்கப்பூராக மலேசியாவாக மாற்றுவார்கள் என நினைத்தார்கள். 2022 அளவில் கடனை மீளச்செலுத்த முடியாமல் வங்குரோத்து நாடென உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தப்பட்டது. இறுதியில் பிள்ளைகள் அனைவருமே பாஸ்போர்ட் அலுவலகத்தில் நித்திரையின்றி விழித்திருக்கவேண்டிய நிலையேற்பட்டது. நாட்டைவிட்டுச்செல்ல எல்லாவிதத்திலும் அழுத்தம்கொடுக்கின்ற மட்டமொன்று உருவாகியது. உற்பத்திப் பொருளாதாரத்தை சீரழித்து, முட்டையையும் தேங்காயையும் பொன்னாங்கண்ணிக் கீரையையும் அரசியையும் எல்லாவற்றையும் வெளிநாட்டிலிருந்து கொண்டுவருகின்ற மட்டத்தை ஏற்படுத்தினார்கள்.

துணிமணிகள், கடதாசி, புதிய கைத்தொழில் உற்பத்திகளை மேற்கொள்ளாத வங்குரோத்து நாட்டை உருவாக்கினார்கள். நாட்டின் வளங்களை விற்று ஒரு வருடத்தை ஓட்டிக்கொள்கின்ற பொருளாதாரத்தை உருவாக்கினார்கள். பண்டைய வளவுகளில் இருந்த நாசகார புத்திரர்களைப்போல் நடந்துகொண்டார்கள். இறுதியில் தற்போது யுக்கிரெயின் ரஷ்யா ஆகிய இருநாடுகளும் இலங்கையிலிருந்து யுத்தத்திற்காக கூலிப்படைகளை பெற்றுக்கொள்கின்ற நிலைமையை உருவாக்கினார்கள் பாரிய மனிதப்படுகொலை இடம்பெறுகின்ற இரண்டு நாடுகளுக்கிடையிலான யுத்தத்தில் கூலிப்படையினராக இராணுவத்தில் சேர்ந்துகொள்கின்ற இலங்கையர்களை உருவாக்கினார்கள்.

குற்றச்செயல்கள் மலிந்த ஒரு நாட்டை உருவாக்கி இருக்கிறார்கள். போதைப் பொருட்களை நாடு பூராவிலும் விரிவாக்கி, பெண்கள் துன்புறுத்தல், சிறுவர் துன்புறுத்தல் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் 439 யானைகளைக் கொன்று விலங்குகள்கூட வாழமுடியாத நாட்டை உருவாக்கி இருக்கிறார்கள். மலையகத்தை அழித்து, நீரூற்றுகள் வற்றிப்போய், ஆற்றுப் படுகைளை அகழ்ந்து தற்போது கடல்நீர் தெதுருஓயா ஊடாக உள்நாட்டுக்கு வருகின்றது. சுற்றுப்புறங்கள் உவர் நீரினால் நிரம்பி நாசமாக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவுகள் அதிகரித்து முழுநாடுமே அழிவடைகின்ற முறைமையொன்றே இருக்கின்றது. கூலி இராணுவத்தில் சேர்ந்து யுத்தம் புரியுமாறு இளைஞர்களுக்கு அழுத்தம்கொடுக்கின்ற ஒரு நாட்டில் இதிலேயே சஜித் பிரேமதாசாக்கள் தோணி ஒட்டுகிறார்கள்.

அந்த தோணியை ரவி கருணாநாயக்கமார்கள் தள்ளிவிடுகிறார்கள். அள்ளிச்செல்கின்ற ஆற்றுவெள்ளத்திற்கு எதிர்த்திசையில் தோணி ஓட்டவே நாங்கள் அதிகாரத்தைக் கோருகிறோம். ரணில் விக்கிரமசிங்கவும் ஹர்ஷ த சில்வாவும் குருவும் சீடனும் போன்றவர்கள். இவர்கள் புதியவர்களா, 2015 – 2019 பொருளாதாரப் அரசாங்கத்தின் பொருளாதாரக் குழுவில் எரான் விக்கிரமரத்ன, ஹர்ஷ ஒன்றாக இருந்தவர்களாவர். இது புதிய பொருளாதாரக் குழுவா? நாட்டுக்குப் புதிய பொருளாதார உபாயமாரக்கமொன்றைக் கொண்டுவரவே நாங்கள் தயாராகி வருகிறோம். அதற்காக மூலதனம், தொழில்நுட்பம், மூலப்பொருட்கள், திறன்கொண்ட உழைப்பு படையொன்று தேவை. உற்பத்தி செய்யப்படுகின்ற அந்த பண்டங்களை விற்பனைசெய்ய பலம்பொருந்திய சந்தையொன்று தேவை. இந்த கல்வித்திட்டமானது தொடர்ந்தும் நல்லெதொரு பிரஜையை உருவாக்குகின்ற ஒன்றல்ல. பிள்ளைகளுக்குச் சுமையாக பிள்ளைகளுக்கு ஊழ்வினையாக அமைந்துவிட்ட கல்வியாகும், அத்துடன் அம்மாவுக்கும் சுமையாகும். அம்மாவின் சுமையிலிருந்தும் பிள்ளையின் சுமையிலிருந்தும் விடுவித்துக்கொண்ட ஓர் உலகத்தடன் முன்நோக்கிச் செல்கின்ற அறிவின் திரட்சியைக்கொண்ட கல்வியொன்று அறிமுகம் செய்யப்படும்.

எமது ஒட்டுமொத்த விவசாயத்துறையுமே நாசமாக்கப்பட்டுவிட்டது. அதற்கு மீண்டும் உயிர்கொடுக்க வேண்டும். கப்பற் தொழில்த்துறையில் நாட்டை முன்நோக்கி நகர்த்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்படல் வேண்டும். பொருளாதாரத்துடன் இணைக்கப்படாதவர்கள் புழுதியாக மாற்றப்பட்டவர்கள் அங்குமிங்கும் அலைந்து திரிகிறார்கள். அவர்கள் பொருளாதாரத்தில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டுள்ளார்கள். கமக்காரர்கள், மீனவர்கள், இளைஞர்களை பொருளாதாரத்துடன் இணைத்துக்கொள்கின்ற புதிய வழிமுறைகளை அமுலாக்குவோம். பொருளாதாரத்தில் இருந்து பெறப்படுகின்ற பெறுபேறுகள் நியாயமானவகையில் மக்கள் மத்தியில் பகிர்ந்துசெல்ல வேண்டும். சமமான வகையிலல்ல. உழைக்கின்றவருக்கு நியாயமான பங்கு கிடைக்கவேண்டும். தற்போது பொருளாதாரம் மிகவும் குறைந்த எண்ணிக்கை கொண்டவர்களிடம் செறிவடைந்துள்ளது. அதனை விரிவாக்கிட வேண்டும். அதற்குள்ளே கைத்தொழிலதிபர்கள், புதிய தொழில்முயற்சியாளர்கள் முன்வந்து இளைஞர்களுக்கு தொழில் கிடைக்கும். அந்த பொருளாதாரத்தில் பிரஜைகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை, சிறந்த போக்குவரத்துச் சேவை வழங்கப்படும்.

முதியவர்களும் ஊனமுற்ற பிரஜைகளும் சமூகப்பொறுப்பு என்றவகையில் கவனிக்கப்படுவார்கள். எமது அரசாங்கத்தின்கீழ் முதலாவதாக உணவு, சுகாதாரம் மற்றும் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி உறுதிப்படுத்தப்படும். அடித்துச் செல்லப்படுகின்ற இந்த பாதையிலேயே அடித்துச் செல்லப்படுவதற்காக நாங்கள் வரவில்லை. அடித்துச் செல்கின்ற இந்த ஆற்றில் கடதாசி தோணிகளை ஓடவிட சஜித் பிரேதாசவினால் முடியும். வேறு எதனையுமே செய்ய முடியாது. எனினும் இதனை புதிய திசைக்கு திருப்பவே நாங்கள் வருகிறோம். புதிய அரசியல் கலாசாரமொன்று புதிய பொருளாதாரப் பயணமொன்று சகோதரத்துவமும் ஈடுபாடும்கொண்ட சமூகமொன்றைக் கட்டியெழுப்பவதற்காகவே. வெறுமனே ஜனாதிபதி அமர்வதற்காக அரசாங்கமொன்றை அமைப்பதில் நாங்கள் கைவைப்பதில்லை. புதிய மறுமலர்ச்சி யுகமொன்றை உருவாக்குகின்ற பணியிலேயே நாங்கள் கைவைக்கிறோம்.

ரணில் விக்கிரமசிங்க பழைய மரபின்படி அரசி கொடுத்து வாக்களைப் பெறுவதிலேயே கைவைத்துள்ளார். லயிட் பில், தண்ணீர் பில்லைக் குறைத்து மலையக மக்களின் சம்பளத்தை சற்று அதிகரிக்கவும் முயற்சி செய்கிறார். அது அரசியலல்ல, கப்பம், இலஞ்சம் வழங்குவதாகும். சஜித் ரணிலிடம் நவீன அரசியல் கிடையாது. சிஸ்டம் சேன்ஞ் பண்ண அதிகாரம் தேவையில்லையென அண்மையில் சஜித் கூறினார், எதிர்க்கட்சியில் இருந்துகொண்டெ செய்கிறாராம். அப்படியானால் அவரை எதிர்க்கட்சியிலேயே வைப்போம். பழைய அரசியலை நிராகரித்து கூத்தாட்டம் போடுகின்ற மே தினத்தை நாங்கள் மாற்றியமைக்கின்ற தீர்மானகரமான எல்லைக்கோடாக மாற்றிக்கொள்வோம். உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரே ஒரேயொரு மே தின மேடை தேசிய மக்கள் சக்தியின் மேடை மாத்திரமேயாகும். குறிப்பாக கமக்காரர்களின் மாபெரும் அணிதிரளல் இன்று அநுராதபுரத்தில் நடைபெறுகின்றது. பெருந்திரளான மீனவர் சமூகத்தை முதன்மையாகக்கொண்ட குழுவினர் மாத்தறையில் குழுமி இருக்கிறார்கள். கொழும்பில் இந்நாட்டின் உழைக்கும் மக்கள் அணிதிரண்டு இருக்கிறார்கள்.

திருவாளர் சஜித் அவர்களே நீங்கள் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு சிஸ்டம் சேன்ஞ் பண்ணுங்கள். நாங்கள் அதிகாரத்தை வென்றெடுத்து களவு, விரயமான அரசியல், கப்பம் இலஞ்ச அரசியலை தடுத்துநிறுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி புதிய பொருளாதாரப் பயணத்தை தொடங்குவோம். உலகத்தார் முன்னிலையில் அபகீர்த்திக்கு இலக்காகியுள்ள நாட்டை கீர்த்திமிக்க நிலைமைக்கு கொண்டுவர அதிகாரம் தேவை. சஜித்திற்கு ரணிலுக்கு அரிசி பங்கிட அதிகாரம் தேவையில்லை. ஒரு முதலாளி இருந்தால் போதும். அவர்கள் புரிவது பிளவுபடுத்துகின்ற அரசியலாகும். தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டை புதிய மறுமல்ச்சி யுகத்திற்கு கொண்டுசெல்கின்ற அரசியலில் ஈடுபடும்.

பாரிய சுனாமி பேரழிவினால் நாசமடைந்த பேரலிய புகையிரத வீதியை 57 நாட்களில் மீளமைத்தோம். காலி பஸ் தரிப்பு நிலையத்தை அமைத்தோம். முகாம்களில் இருந்தவர்களின் பிள்ளைகளுக்காக சிறுவர் நிலையங்கள் அமைக்கப்பட்டன. எமது மருத்துவர்கள் உளநிலைசார்ந்த கிளினிக்குகளை நடாத்தினார்கள். அந்த பேரழிவில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்காக நாங்கள் முகாம்களை அமைத்தோம். பின்னர் வீடுகளை அமைத்தோம். பாரிய வெள்ளப்பெருக்குகளின்போது கிணறுகளிலிருந்து நீரை இறைத்தோம். வீடுகளை அமைத்தோம். வயிற்றுப்பசி போக்க உணவு பங்கிட்டோம். முழு உலகத்தையும் பாதித்த கொவிட் பெருந்தொற்றின்போது ஒருசில வைத்தியாலைகளில் கட்டிடங்களை அமைத்தோம். எனினும் அவை எமது ஒட்டுமொத்தமானவை அல்ல. மக்கள் அனர்த்தங்களை எதிர்நோக்கிய எந்தவோர் இடத்திலும் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் பாசறைகளை அமைத்து இடையீடு செய்தோம். இப்போது தீர்மானகரமான முறையில் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இடையீடுசெய்ய வேண்டும். ரணில் இதற்கும் ஏதாவது முடிச்சுப்போடுவாரோ எனத் தெரியவில்லையென ஒருசிலர் கூறுகிறார்கள். கோவணத்தின் முடிச்சியை மாத்திரமே ரணிலுக்குப் போடமுடியும். எங்களுக்குத் தெரியாதா ரணில்! 2002 இல் அரசாங்கத்தை அமைத்தார்.

2004 இல் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். 2015 இல் மைத்திரியுடன் அரசாங்கமொன்றை அமைத்தார். 2018 இல் விட்டுக்கு அனுப்பப்பட்டார். இன்று நாங்கள் சனநாயத்திற்காக இடையீடு செய்ததால் சற்று நிம்மதிப் பெருமூச்சு எடுத்தோம். டீ.எஸ். – கொத்தலாவல கட்டியெழுப்பிய கட்சி 2019 அளவில் ஒன்றுவரை வீழ்த்தப்பட்டது. அவர் சனாதிபதி தேர்தலில் தோல்வியுற்று சுருட்டிக்கொண்டு வீட்டுக்குப் போவார். நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம். நாங்கள் 25 அமைச்சுக்களை நிறுவி புதிய அமைச்சரவையை நிறுவி புதிய செயலாளர்கள் 25 பேரை நியமிப்போம். யார் பாதுகாப்புச் செயலாளராகப் போகிறார், இலஞ்சம் மற்றும் ஊழல்களை கண்டறிவதற்கான ஆணைக்குழுவிற்கு யாரை நியமிப்பபது என்ற வகையில் அடிப்படைத் திட்டங்களை வகுத்துள்ளோம். முதலாவது 24 மணத்தியாலங்களுக்குள் பாராளுமன்றத்தைக் கலைப்போம். முதலாவது சுற்றில் ரணில் வீட்டுக்கு, இரண்டாவது சுற்றில் அனைவருமே வீட்டுக்கு.

மிகவும் சிரமமான காலத்தை நாங்கள் கடந்து வந்திருக்கிறோம். அவதூறுகளுக்கு முகங்கொடுத்தோம். பொதுமக்களின் பணத்தை திருடியவர்கள் பதற்றமடையவேண்டும். ரணில் விக்கிரமசிங்க 1977 இல் அதிகாரத்தைப்பெற்று அரசியல் பழிவாங்கல்களை மேற்கொண்டு 1980 ஜூலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை வெளியில் போட்டு அபிவிருத்திச் சபை தேர்தலை கொள்ளையடிப்பதற்காக யாழ் நூலகத்தை தீக்கிரையாக்கினார்கள். கோட் அணிந்து டை போட்டுக்கொண்டிருக்கின்ற ரணிலின் டையில் இரத்தம் தோய்ந்துள்ளது. “பட்டலந்த கினிலேம” எனும் புத்தகத்தை வாசியுங்கள். நிறைவேற்று ஜனாதிபதி பதவியை உருவாக்கிய ரணில் அரசியலமைப்பினை மாற்றிக்கொண்டு வருகையில் தமது வாழ்நாளில் ஊழல்மிக்க பிரபுக்கள் வம்சம் சவாலுக்கு இலக்காகுமென நினைத்தார்களா? தமக்கு தேவையான வகையில் அரசியலமைப்பினை மாற்றியமைத்துக்கொண்ட மகிந்த ராஜபக்ஷ அவ்வாறு நினைத்தாரா? மகனுக்கு வழிசமைத்த மகிந்த தான் தள்ளாடும் காலத்தில் இப்படி நடக்குமென நினைத்தாரா? 76 வருடங்களுக்குப் பின்னர் அவர்கள் நினைத்திராத அரசியலில், பிரகாசமிக்க அரசியல் திருப்பம், ஒளிருகின்ற அரசியல் திருப்பம், மக்களின் பாரிய எழுச்சியிலான அரசியல் திருப்பம் மூலமாக தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் வழங்கப்படுகின்றது.

மகிந்த, கோட்டாபய பேயாட்டம் ஆடும்போது சஜித்தின் தலையில் மகுடம் விழுமென நினைத்தார்கள். அவரது தலையில் பலாஇலை கிரீடமொன்று விழுகின்றது. காட்போட் வாளொன்று கிடைக்கின்றது. தற்போது அரசியல்வாதிகள் மாத்திரமல்ல ஒருசில ஊடக நிறுவனங்களும் ஊளையிடத் தொடங்கியுள்ளன. எந்தவோர் ஊடக நிறுவனத்திற்கும் அரசியல் இயக்கங்ளை விமர்சிப்பதற்கான உரிமை உண்டு. நாங்கள் தவறிழைத்தால் சுட்டிக்காட்டுங்கள். நாங்கள் அவற்றை திருத்திக் கொள்கிறோம். நாங்கள் ஒரு திறந்த அரசியல் இயக்கமாவோம். குற்றங்களையும் தவறுகளையும் புரிந்து நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு சிறையில் இருப்பவர்களுக்கு சனாதிபதி மன்னிப்பு வழங்கமாட்டோம். பிணைப்பணத்தை செலுத்திக்கொள்ள முடியாத அப்பாவியொருவர் பற்றி வேண்டுமானால் பரிசீலனை செய்வோம்.

நாங்கள் அனைவரிமும் கேட்டுக்கொள்வது தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். அந்த தவறுகளை ஏற்றுக்கொள்கின்ற திறந்த அரசியலே நாங்கள். எனினும் அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு அமைவாக மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதலுக்கு கட்டுப்படமாட்டோம். பயப்படவும் மாட்டோம். பெருந்தொயைான ஊடகங்கள், பெருந்தொகையான சமூக வலைத்தளங்களைச் சேர்ந்தவர்களில் பலர் எம்மோடு ஒரு வார்த்தைகூட பேசாமல் எம்மைப் பற்றி எழுதத் தொடங்கி உள்ளார்கள், கூறத் தொடங்கி உள்ளார்கள். இறுதியாகக் கூறுவது ஊர்களில் இருக்கின்ற ஏனைய அரசியல் நண்பர்களுடன் கலந்துபேசி, விழிப்புணர்வூட்டி, ஒரே அணியாக முன்நோக்கி வருமாறே. அடுத்த மே தினத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்கீழ் சந்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *