மூன்று மாதங்களில் எய்ட்ஸ் நோயால் 695 பேர் பாதிப்பு
2024 ஆம் ஆண்டின் கடந்த 3 மாதங்களில், இலங்கையில் 695 புதிய எச்ஐவி தொற்று நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, தேசிய STD மற்றும் AIDS கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் சமூக சுகாதார நிபுணர் ஜானகி விதானாராச்சி தெரிவித்துள்ளார்.
இது முன்னைய 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 14 வீத அதிகரிப்பு ஆகும். நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், கொழும்பில் நடத்தப்பட்ட மருத்துவ மனைகளில் கண்டறியப்பட்ட HIV STD நோயாளிகளின் எண்ணிக்கை நாற்பது சத வீதமாக அதிகரித்துள்ளதாகவும், சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பால்வினை நோய்கள் தொடர்பில் இளைஞர்கள் மத்தியில் போதிய புரிதல் இல்லாத காரணத்தினால், இந்த நிலை உருவாகியுள்ளதாகவும் சுகாதார திணைக்களங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
பாடசாலைக் காலத்தில் வயதுக்கேற்ற பாலினக் கல்வி வழங்கப்பட வேண்டுமென,வைத்திய நிபுணரான ஜானகி விதானாராச்சி குறிப்பிட்டுள்ளார். எச்.ஐ.வி. மற்றும் பாலின பரவும் நோயால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால், know for sure என்ற தொலைபேசி செயலி மூலம் தொடர்பு கொள்ள முடியும். அத்துடன், நோய் பரிசோதனைக்கும் முன்பதிவு செய்யலாம். மேலும், அவர்கள் தங்கள் சுய பரிசோதனைக் கருவி பற்றிய தகவல்களை, இரகசியமாக வீட்டிற்குக் கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )