உள்நாடு

சியனே ஸ்டார் கரப்பந்தாட்ட விளையாட்டு அரங்கு மார்ச் 29 அன்று மக்களின் பாவனைக்கு..!  பாடசாலைகளில்  கரப்பந்தாட்டத்தை  பிரபலப்படுத்த  ரெஜி  ரணதுங்க  ஞாபகார்த்த  கரப்பந்தாட்டப்  போட்டி  29, 30, 31  திகதிகளில்..!

கம்பஹா மாநகர சபைக்கு சொந்தமான மடமவத்தை சியனே ஸ்டார் கரப்பந்தாட்ட அரங்கு மீள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக நகர அபிவிருத்தி அதிகாரசபை இங்கு மீள்  அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டது.

அதன்படி, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் சியனே ஸ்டார் கரப்பந்தாட்ட  விளையாட்டு அரங்கு மார்ச் 29ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.

கரப்பந்தாட்ட அரங்கு திறப்பு விழாவுடன் கம்பஹா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மத்தியில் வலைப்பந்தாட்டத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் ரெஜி ரணதுங்க ஞாபகார்த்த கிண்ண வலைப்பந்தாட்ட போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் மார்ச் மாதம் 29, 30  மற்றும் 31 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிகள் திறந்த ஆண்கள், 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கம்பஹா மாநகர சபைக்கு உட்பட்ட மடமவத்தை சியனே ஸ்டார் கரப்பந்தாட்ட விளையாட்டு அரங்கு நவீன உபகரணங்கள் மற்றும் ஏனைய வசதிகளுடன் மீள் அபிவிருத்தி செய்து அதனை அண்மித்த பகுதியை நகர அபிவிருத்தி பூங்காவாக அபிவிருத்தி செய்யும் பணிகள் 2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில், சியனே ஸ்டார் உள்ளக கரப்பந்தாட்ட அரங்கத்தின் மறு அபிவிருத்தி திட்டத்திற்கான மதிப்பிடப்பட்ட தொகை 44,348,725.00 ரூபாயாகும். ஆனால் கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்த அரங்கின் கட்டுமானம் நிறுத்தப்பட்டது. சியனே ஸ்டார் கரப்பந்தாட்டக் கழகம் மற்றும் பிரதேச மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப புனரமைப்புப் பணிகளை மீள ஆரம்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். இதன்படி, பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் இத்திட்டத்தை வெளிப்புற கரப்பந்தாட்ட விளையாட்டு அரங்கமாக அபிவிருத்தி செய்து மக்களுக்கு வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்தது.

இந்த சியனே ஸ்டார் விளையாட்டுக் கழகம் சுமார் 74 வருட வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்த விளையாட்டுக் கழகத்தின் ஊடாக இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியின் மூன்று தலைவர்கள் உருவாக்கப்பட்டுள்ளதோடு, தற்போதைய தேசிய கரப்பந்தாட்ட அணியின் தலைவரும் இந்த விளையாட்டுக் கழகத்தில் இருப்பது விசேடமாகும்.

 

(முனீரா அபூபக்கர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *