உள்நாடு

உலக நீர் தின விழா 2024 நிகழ்வு..!

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஏற்பாடு செய்த உலக நீர் தின விழா 2024 கடந்த 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை சபையின் நீர் மற்றும் சுகாதாரத்துக்கான சிறப்பு மையத்தில் (cewas) நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சசீந்ர ராஜபக்ஷவின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.டி.தர்மரத்ன விசேட சொற்பொழிவாற்றினார். 2024 உலக நீர் தினத்தை முன்னிட்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களிடையே “சமாதானத்துக்காக நீர்” என்ற தலைப்பில் நடாத்திய சித்திர மற்றும் கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு இதன்போது பரிசில்களும் வழங்கப்பட்டன.

அத்துடன் சபையில் 25 வருடங்கள் தொடர்ந்து சேவையாற்றிய ஊழியர்களுக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 3ஏ சித்தி பெற்ற சபை ஊழியர்களின் பிள்ளைகளுக்கும் இதன்போது பரிசில்களும் வழங்கப்பட்டன. நடப்பாண்டுக்கான நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சிறந்த காரியாலய தெரிவுப் போட்டியில் வெற்றிபெற்ற காரியாலயங்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.சி.எம். நபீல், சபையின் தலைவர் நிசாந்த ரணதுங்க, பொது முகாமையாளர் ருவன் லியனகே உட்பட உள்ளிட்ட உயரதிகாரிகள் இதன்போது உரைநிகழ்த்தினார்கள்.சபையின் கழிவுநீர் பவுசர்களை முன்பதிவு செய்வதற்கான ஸ்மார்ட்போன் செயலியும் (Gully Bowser App) இந்நிகழ்வில் அறிமுப்படுத்தப்பட்டது.

 

(பேருவளை பி.எம். முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *