விளையாட்டு

தடுமாறிய இலங்கையை தூக்கி நிறுத்திய தனஞ்சய மற்றும் கமிந்து ஜோடி

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அணித்தலைவரான தனஞ்சய டி சில்வா மற்றும் சகலதுறை வீரரான கமிந்து மென்டிஸ் ஆகியோரில் அசத்தல் சதங்களின் உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 280 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

முதல் டெஸ்ட் போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்குக் கொடுத்திருந்தது. இதற்கமைய களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப வரிசை வந்த வேகத்திலே பெவிலியன் திரும்பியது. நிஷான் மதுஸ்க (2) , குசல் மெண்டிஸ் (16), திமுத் கருணாரத்ன (17) என நிலைக்காமல் சென்றனர். அடுத்து வந்த அனுபவமிக்க வீரர்களில் அஞ்சலோ மெத்யூஸ் 5 ஓட்டங்களுடன் ரன்அவுட் ஆகி ஏமாற்ற, மற்றைய வீரரான தினேஷ் சந்திமால் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி 57 ஓட்டங்களுக்குள் முதல் 5 வக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

பின்னர் 6ஆவது விக்கெட்டில் இணைந்த அணித்தலைவரான தனஞ்சய டி சில்வா மற்றும் சகலதுறை வீரரான கமிந்து மென்டிஸ் ஆகியோர் தமது அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டதுடன் தமது அரைச்சதம் மற்றும் சதங்களை விளாசி சரிவிலிருந்த இலங்கை அணிக்கு புத்துணர்வு கொடுத்தனர்.

இந்த இணைப்பாட்டத்தில் பெறுமதி மிக்க 202 ஓட்டங்களைப் பெற்றிருக்க கமிந்து மெண்டிஸ் 102 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்த ஓவரில் அணித்தலைவரான தனஞ்சய டி சில்வா 102 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் நிலைக்காமல் போக இலங்கை அணி 68 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 280 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் ஹலீட் அஹமட் மற்றும் நஹிட் ரானா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *