விளையாட்டு

லியனகேவின் சதம் வீண். வங்கதேசத்திடம் ஒருநாள் தொடரை கோட்டை விட்டது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் வீணாகிப் போக 4 விக்கெட்டுக்களால் தோற்றுப் போன இலங்கை அணி ஒருநாள் தொடரை 2:1 என கோட்டைவிட்டது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றிருந்தது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3ஆவதும் இறுதியுமான போட்டி இன்று பகல் போட்டியாக சிட்டகொங் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தேர்வு செய்தது.

இதற்கமைய துடுப்பாடிய இலங்கை அணிக்கு முன் வரிசை வீரர்கள் ஓட்டங்களை பெற்றுக் கொடுக்கத் தவறினர். இருப்பினும் மத்திய வரிசையில் வந்த ஜனித் லியனகே தனி ஆளாய்ப் போராடி ஒருநாள் சர்வதேச அரங்கில் தனது கன்னி சதத்தை விளாசி 101 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க இலங்கை அணி 50 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அடுத்து அதிகபட்ச ஓட்டமாக சரித் அசலங்கவின் 37 ஓட்டங்கள் பதிவாகியது. பந்து வீச்சில் டஸ்கின் அஹமட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 236 ஓட்டங்கள் என்ற சவால் மிக்க வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த பங்களாதேஷ் அணியின் ஆரம்ப வீரரான சௌமியா சர்கார் உபாதை ஏற்பட்டு போட்டியிலிருந்து வெளியேற அவருக்கு பதிலாக டன்ஷிட் ஹசன் அனாமுல் ஹக்குடன் ஆரம்ப வீரராக களம் கண்டார். இந்த ஜோடி 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருக்க அனாமுல் ஹக் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த அணித்தலைவரான நஜ்முல் ஹுசைன் மற்றும் முஹம்மதுல்லாஹ் ஆகியோர் தலா ஒரு ஓட்டத்துடன் லஹிரு குமாரவிடம் சரணடைந்தனர்.

தொடர்ந்து களத்திலிருந்து அசத்திய டன்ஷிட் ஹசன் அரைச் சதம் கடந்து 84 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மிராஸ் 25 ஓட்டங்களை சேர்த்துக் கொடுக்க முஸ்பிகுர் ரஹீம் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களை பெற்றதுடன், 8ஆவது விக்கெட்டாக களம் நுழைந்த ரிஷாட் ஹுசைன் அதிரடியில் மிரட்ட 4 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 18 பந்துகளில் 48 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழக்காமல் களத்திலிருக்க பங்களாதேஷ் அணி 40.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 237 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பதிவு செய்ததுடன் ஒருநாள் தொடரை 2:1 என கைப்பற்றியது. பந்துவீச்சில் லஹிரு குமார 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். போட்டியின் நாயகனாக ரிஷாத் ஹுசைனும், தொடரின் நாயகனாக நஜ்முல் ஹுசைன் சாண்டோவும் தெரிவாகினர்.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *