உள்நாடு

எமது நாட்டினால் இன்னமும் கருவாடு, மாசிக்கருவாட்டினை தயாரித்துக்கொள்ள முடியவில்லை தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் தோழர் சமந்த வித்யாரத்ன.

இந்த நாடு பல பிரமாண்டமான நெருக்கடிகளுக்கு இரையாகியதாம், அந்த நெருக்கடிகளிலிருந்து மீட்டெடுத்தவர்கள் ரணில் ராஜபக்ஷவே என தற்போது ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். வரிசைகள் கிடையாதாம். எண்ணெய் தேவையான அளவில் கிடைக்கிறதாம். 2019 இல் அரசாங்கத்தை நிறுவுகையில் ஒரு லீற்றர் டீசல் 110 ரூபாய் இற்கே இருந்தது. தற்போது ஒரு லீற்றர் டீசல் 363 ரூபாய். ஒரு லீற்றர் பெற்றொல் 136 ரூபாய் இற்கே இருந்தது. தற்போது ஒரு லீற்றர் பெற்றோல் 371 ரூபாய். எனினும் அந்தக் காலத்திலும் இந்தக் காலத்திலும் ஒரு கிலோ மாசி மீன் விலை ஒரே மட்டத்திலேயே நிலவுகின்றது. அதில் மாற்றமேற்படவில்லை. அந்தக் காலத்தில் நிலவிய அரிசி, சீனி விலை தற்போது அதிகரித்துவிட்டது. பிரச்சினையைத் தீர்த்திருந்தால் வைத்தியசாலையில் மருந்து இருக்கவேண்டுமே. ஆனால் ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள் பொறியிலாளர்கள், மருத்துவர்கள் நாட்டைவிட்டுச் செல்லாதிருக்கவேண்டும். தொழில்முயற்சிகள், கைத்தொழில்கள் மூடப்படாதிருத்தல் வேண்டும். மின்சார சபையினால் பத்திலட்சத்து அறுபத்தொன்பதாயிரத்து ஐநூற்று அறுபத்திமூன்று வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் கூறகின்றவிதத்தில் பிரச்சினை தீர்ந்துவிட்டதா? பொருளாதார நெருக்கடி உச்சத்தை அடைந்து அதற்கு அப்பாலும் பயணித்து சமூக நெருக்கடி உருவாகிவிட்டது.

அந்த நெருக்கடிகளுக்கு பதில்தேட ஒவ்வொரு கருத்திட்டத்தை அமைத்துக்கொண்டுள்ளார்கள். ”யுக்தியே மெஹெயும” எனும் பெயரில் போதைத்தூள் பிடிக்கின்ற நடவடிக்கையொன்று அமுலாக்கப்பட்டுள்ளது. நாற்பது நாட்களுக்குள் 59000 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தம்பட்டம் அடிக்கிறார்கள். இந்த ஆட்சியாளர்கள் 76 வருடங்களுக்குள் உருவாக்கிய நாட்டின் நிலை அதுதான். பேருந்துகளில் புகையிரதங்களில் பயணிக்கின்ற பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்களை பிடிப்பதற்காக மற்றுமொரு கருத்திட்டத்தை அமுலாக்கினார்கள். அத்தகைய கூறுகள் அமைக்கப்படக் காரணம் பொருளாதார நெருக்கடிக்கு அப்பால் பயணித்த சமூக, கலாசார நெருக்கடிகளாகும். பிள்ளைகளால் கல்விகற்ற முடியாத, மூன்றுவேளை உண்ணக் கிடைக்காத, சுகாதாரரீதியாக சீரழிகின்ற நிலை உருவாகியுள்ளது. நெருக்கடிகள் முற்றுப்பெறவில்லை. நெருக்கடிகளை வார்த்தைகளுக்குள்ளே மறைக்கப் பார்க்கிறார்கள். இந்த ஆட்சியாளர்கள் இருக்கும்வரை நெருக்கடிகள் தீரப்போவதில்லை.

இந்நாட்டில் மூன்றுஇலட்சத்து பதினையாயிரம் மீனவர்கள் நன்னீர் மற்றும் உவர்நீர் மீன்பிடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஜொப் அரசாங்கம் கொடுத்ததல்ல. கடல் வழங்கிய தொழில்களாகும். கடல் வழங்கிய தொழில்களுக்கு அரசாங்கத்தினால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. மீன்பிடித்தொழிலுடன் இணைந்த பனிக்கட்டி தயாரித்தல், மீன் விற்பனையாளர்கள், வாகனங்களை கொண்டுசெல்பவர்கள், வலைகளை வழங்குபவர்கள் என்றவகையில் ஏறக்குறைய இருபத்தொரு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர்வரை மீன்பிடித்துறையில் பராமரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மீன்பிடித்துறை தனித்துவமான ஒரு துறையாகும். இந்த துறையின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க ஆட்சியாளர்களுக்கு அவசியமில்லையா? மீனவர்களே இலங்கையின் பிரதானமான புரதச்சத்து வழங்குபவர்களாவர். இந்நாட்டின் பிள்ளைகளுக்குஇ எமக்கு அவசியமான புரதச்சத்தினை வழங்குபவர்கள் நீங்களே. பல்லாயிரக்கணக்கான வருடங்களாக புரியப்பட்டு வருகின்ற ஒரு தொழிலே இது. விருத்தியடைந்த நாடுகளில் புதிய தொழில்நுட்பத்துடன் இணைத்து ஸ்மார்ட் பண்ணி விருத்திசெய்த கைத்தொழிலாக மாற்றியிருக்கிறார்கள். ஆனால் எமது மீன்பிடித் தொழிலுக்கு தொழில்நுட்பத்திலிருந்து விவேகத்திலிருந்து பயன்பெறுவது கிடையாது. நோர்வே, ஜப்பான், மலேசியா, சீனா இதனை விருத்தியடைந்த கைத்தொழிலாக மாற்றிக்கொண்டுள்ளன.

சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய உங்களுக்கு பொருளாதார சுதந்திரம், கல்விச் சுதந்திரம் உள்ளிட்ட உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை. திசைகாட்டியை முதன்மையாகக்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தேசிய அரசாங்கமொன்று தோன்றிய நாளில்தான் உங்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும். அன்றைய தினத்தில் உண்மையாக சுதந்திரம் கிடைக்கும். அது நாங்கள் பெறப்படவேண்டிய சுதந்திரமாகும். அதற்கான ஒரு தேசிய இயக்கத்தை நாங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும். தேசிய இயக்கத்தை அதிகாரத்தைப் பெற்ற பின்னர் பாரிய தேசிய மறுமலர்ச்சியை நோக்கித் தள்ளவேண்டும்.

இந்த நாட்டில் அதிகாரத்தைப் பெறுவதற்காக பஞ்சமகா சக்திகளை ஒன்று சேர்த்தது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கும். பிக்குமார்கள், வைத்தியர்கள், ஆசிரியர்கள், கமக்காரர்கள், தொழிலாளர்கள் அந்த பஞ்சமகா சக்தி தற்போது இருக்கின்றதா? தற்போது அவர்களிடம் இருக்கின்ற சக்தியைத் தெரியுமா? பாதாளச் சக்தி, போதைத்தூள் சக்தி, திருடர்களை உள்ளிட்ட ஊழல்மிக்க சக்தி, இனவாத – மதவாத சக்தி. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டே அறுபத்தொன்பது இலட்சம் வாக்குகள் பெறப்பட்டன என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த நீலப்பச்சை ஆட்சியாளர்களின் அரவணைப்பில் பாதாள உலகம் கொஞ்சிவிளையாடுவதால் பாதாள உலகத்தை அழித்துவிட இயலாது. போதைப்பொருட்களை கொண்டுவருகின்ற பெரிய புள்ளிகள் பாராளுமன்றத்திலேயே இருக்கிறார்கள். அவர்களைப் பிடிப்பதில்லை.

பஞ்சமகா சக்திகளுடன் மேலும் பல சக்திகளை ஒன்றுசேர்த்து உலகில் பெருமைமிக்க தேசமொன்றை உருவாக்குவதற்காக அனைத்துச் சக்திகளையும் ஒரே பிடிக்குள் கொண்டுவந்த சக்திதான் தேசிய மக்கள் சக்தி. நாட்டை நேசிக்கின்ற மகாசங்கைக்குரியவர்கள் எம்முடன் இணைந்துள்ளார்கள். மருத்துவர்களின் மாநாட்டினை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். ஆசிரியர் சங்கக் கூட்டங்களை நடாத்தி தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி சேர்த்திருக்கிறோம். அகில இலங்கை கமக்காரர் சம்மேளனங்களை நாடு பூராவிலும் நடாத்தி ஒரே பாசறைக்குள் கொண்டுவந்திருக்கிறோம். அரச மற்றும் தனியார் பிரிவில் பல்வேறு துறைகளில் இருக்கின்ற அனைத்து தொழிலாளர்களையும் ஒன்றுசேர்த்த பிரமாண்டமான தொழிற்சங்கங்களைக் கட்டியெழுப்பி தேசிய மக்கள் சக்தியுடன் இணைத்திருக்கிறோம். பஞ்சமகா சக்தியை விஞ்சியதாக மற்றுமொரு பிரமாண்டமான சக்தியாக அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தையும் நாங்கள் ஒன்றுசேர்த்திருக்கிறோம்.

இற்றைவரை இந்த நாட்டைக் கட்டியெழுப்பிட ஒரு சக்தியென்றவகையில் பாவித்திராத இளைப்பாறிய முப்படையினரும் ஒரு சக்தியென்றவகையில் எம்மைச்சுற்றி குழுமியிருக்கிறார்கள். 56 சதவீத வாக்குப்பலம் கொண்டவர்களாக விளங்கிய அரசியலில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த பெண்களை நாங்கள் ஒரு சக்தியாக சேர்த்திருக்கிறோம். நாட்டைக் கட்டியெழுப்ப நாட்டை நேசிக்கின்ற பொறியிலாளர்களின் ஒன்றியம், நிதிசார் துறையைச்சேர்ந்த உத்தியோகத்தர்களை சேர்த்துக்கொண்டிருக்கிறோம். இலட்சக் கணக்கில் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளும் ஒரு சக்தியாவர். இலங்கையின் முதலாவது முச்சகரவண்டி மாநாட்டினை எம்பிலிபிட்டியவில் நடாத்தினோம். சட்டத்தரணிகள் சங்கங்களை நாங்கள் அமைத்தோம். அந்த ஒவ்வொரு சக்தியையும் நாங்கள் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி ஒன்று சேர்த்து வருகிறோம்.

இலங்கையில் 29 கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல்கள் இடம்பெற்றன. 29 இலும் வெற்றிபெற்றோம். எம்மால் ஒன்றின் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போயிற்று. சஜித்தின் கும்பலும் ராஜபக்ஷவின் கும்பலும் ஒன்றுசேர்ந்து அதிகாரத்தை நிலைநாட்டினார்கள். ஏனைய அனைத்திலுமே திசைகாட்டி அதிகாரத்தை நிலைநாட்டியது. இவற்றை அவர்கள் உணர்கிறார்கள். காண்கிறார்கள். கடந்த நாட்களில் இந்தியா ஒரு ராஜதந்திர அழைப்பினை விடுத்தது. இந்திய உளவுத்துறை அறிக்கைகளின்படி இலங்கையில் வருங்கால தலைமைத்துவம் இனங்காணப்பட்டுள்ளது. உயிர்த்தஞாயிறு தாக்குதல் பற்றி முன்கூட்டிய திகதியையும் நேரங்களையும் இந்திய ரோ உளவுச்சேவை அறிவித்திருந்தது. அவ்வாறான நுணுக்கமான உளவுச்சேவையொன்றின் அறிக்கையின்படி இலங்கையின் தேர்தல்கள் பற்றிக் கூறமுடியாதா? அதற்கமைவாகவே அழைப்பு கிடைக்கின்றது. இந்த நாட்டில் அடுத்த அதிகாரம் தேசிய மக்கள் சக்தியினுடையதாக மாறுவது நிச்சயம் என்பதை பெருமிதத்துடனும் அபிமானத்துடனும் கூறிக்கொள்கிறேன்.

கடந்த நவெம்பர் மாதத்தில் இலங்கை வரலாற்றில் தலைசிறந்த வழக்குத் தீர்ப்பொன்று வழங்கப்பட்டது. இந்த நாடு வங்குரோத்து அடைய, பொருளாதாரம் வீழச்சியடைய, காரணமாக அமைந்த பிரதிவாதிகள் பெயர்குறிக்கப்பட்டார்கள். மகிந்த ராஜபக்ஷஇ பசில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர்களான அஜித் நிவாட் கப்ரால், டபின்யு. டீ. லக்ஷமன், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர்களான ரீ.பீ. ஜயசுந்தர, ஆட்டிகலவை உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டார்கள். உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினைக்கூட ஏற்றுக்கொள்ளாதவர்கள்.

வரிசைகளில் மடிந்தார்கள், முச்சக்கர வண்டியில் இறந்தார்கள், கமத்தொழிலை நாசமாக்கினார்கள், மீன்பிடித்தொழிலை அழித்தார்கள், பிள்ளையின் கல்வியை இல்லாதொழித்தார்கள், தரங்குன்றிய மருந்துகளைக் கொண்டுவந்து மக்களைக் கொன்றார்கள், அவர்களைத் தண்டிக்கவேண்டும். நீங்கள் தற்போது அனுபவித்துக் கொண்டிருப்பது அநாவசியமான துன்பத்தையாகும். மத்திய வங்கி மோசடி இடம்பெற்றிராவிட்டால், நாட்டுக்கு நான்கு வருடங்களுக்கு மருந்து கொண்டுவர அவசியமான பணம், பதினேழாயிரம் மில்லியன் சீனி வரி மோசடி இடம்பெற்றிராவிட்டால், மூன்று நான்கு போகங்களுக்கு உரம் கொண்டுவந்து கொடுத்திருக்கலாம்.

கடந்த 2021 இல் 2188 மெட்றிக்தொன் மாசிக்கருவாடு கொண்டுவரப்பட்டது. 1453 மில்லியன் ரூபா செலவாகி இருக்கின்றது. இதனை இங்கே தயாரிக்க முடியாதா? 32585 மெட்றிக்தொன் கருவாடு கொண்டுவந்திருக்கிறார்கள். 13990 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 8758 மெட்றிக்தொன் ரீன்மீன் கொண்டுவந்திருக்கிறார்கள். 4891 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அவற்றுக்கு செலவாகியது டொலர்கள். இந்த நாட்டின் மீனவர்களை எவ்வாறு மீட்டெடுப்பது? மீனவர் மீது வற் விதிக்கப்படுகின்றது. அவர்களின் நண்பர்கள் கபடத்தனமான வியாபாரிகள் வகுப்பினர் வெளிநாடுகளிலிருந்து செமன், கருவாடு, மாசிக் கருவாடு கொண்டுவருகிறார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐந்தே வருடங்களில் நாட்டின் மீன்பிடிக் கைத்தொழிலை பிரதான கைத்தொழிலாக உயர்த்திவைக்கும் என சபதமிடுகிறோம். மீனவர் பிடிக்கின்ற மீன்களுக்கு பெறுமதி சேர்த்து அதற்கான பெறுமதியை உருவாக்குவோம்.

மீனவனுக்கு அவசியமான சாதனங்களை இங்கே தயாரிக்கமுடியும். விவசாயத்திற்கு அவசியமான விதையினங்கள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும். கமக்காரனுக்கு அவசியமான கைத்தொழில்களை உருவாக்கிட முடியும். தொழில்முனைவோருக்கு பெண்களுக்கு புதிய கைத்தொழில்களும் புதிய வாய்ப்புகளும் உருவாக்கப்படும். கடலில் இருந்து மீன் அறுவடை மாத்திரமல்ல பெறக்கூடிய அனைத்துவிதமான பயனையும் பெறுவோம். கடல் தாவரப் பூண்டுகள் தற்போது உலகில் மிகவும் பிரபல்யமடைந்து வருகின்றன. அவற்றில் நாங்கள் கைவைக்கவில்லை. பெருநிலத்தையும் பெருங்கடலையும் ஒன்றாக எடுத்து உற்பத்திப் பொருளாதாரமொன்றை உருவாக்கி இந்நாட்டு மக்களின் பொருளாதாரத்தை செழிப்படையச் செய்விப்பதற்கான வேலைத்திட்டமொன்று, கொள்கையொன்று இருக்கின்ற ஒரு கட்சி இருக்குமாயின் அது தேசிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும்.

2004 சுனாமியின்போது முழுஉலகினதும் உதவிகள் பாய்ந்துவந்தன. அந்த நேரத்தில் ” இந்த பாரிய அனர்த்தத்தின்போது நாங்கள் ஒற்றுமைப்படுவோம், முழு உலகத்திலிருந்தும் பாய்ந்துவந்த உதவிகளைப் பாவித்து நாட்டை சீர்செய்வோம்.” என ஆட்சியாளர்கள் கூறினார்கள். ஆனால் ஆட்சியாளர்கள் சடலங்களின்மீது வந்த சுனாமி நிவாரணங்களை கணக்குகளுக்கு பாய்ச்சினார்கள். சிறிலிய கணக்கிற்குச் சென்றது. அப்படிப்பட்ட கொடிய ஆட்சியாளர்கள் இருக்கின்ற ஒரு நாடாகும். முப்பது வருடகால யுத்தத்தை பிணங்கள் மீது முடிவுக்கு கொண்டுவந்தார்கள். முழுநாட்டு மக்களையும் ஒருங்கிணைத்து நாட்டை சீராக்கியிருக்கலாம். எனினும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து சூறையாடத் தொடங்கினார்கள். குடும்பத்திடம் அதிகாரங்களைக் குவிக்கத் தொடங்கினார்கள். நாட்டைக் கட்டியெழுப்பிட இளைஞர்கள் பாழடைந்த வயல்களை சாகுபடிசெய்யத் தொடங்கினார்கள்.

மதில்களில் ஓவியங்கள் தீட்டத் தொடங்கினார்கள். தேசிய மறுமலர்ச்சிக்குச்செல்ல மக்கள் நடுவீதிக்கு இறங்கினார்கள். ஆட்சியாளர்கள் மக்களை வதைக்கத் தொடங்கினார்கள். பல வாய்ப்புகளைத் தவறவிட்டார்கள். நாட்டை வங்குரோத்து அடையச் செய்வித்தார்கள். இலங்கை மண்ணுக்கு இறுதி வாய்ப்பு வந்திருக்கிறது. அந்த வாய்ப்பினை தவறவிடவேண்டாம். ”இவ்வளவு அனர்த்தம் நேர்ந்தும் ஏன் சந்தர்ப்பத்தை தவறவிட்டீர்கள்?” என்று பிள்ளைகள் ஒருநாள் கேட்பாளர்கள். அனைத்துச் சக்திகளையும் ஒன்றுசேர்த்து மறுமலர்ச்சி யுகமொன்றை உருவாக்கிட தயாராகிவருகின்ற உன்னதமான வாய்ப்பு, திசைகாட்டியை வெற்றிபெறச்செய்விக்க ஊக்கத்துடன் செயலாற்றுக. மக்கள் ” விடுகின்ற பெருமூச்சு புயல்காற்றாக மாறிவரட்டும் – வடிக்கின்ற கண்ணீர் வெள்ளப்பெருக்காக மாறிவரட்டும் – வயிற்றுப்பசி பெருநெருப்பாக மாறிவரட்டும் – நாட்டைத் தின்றவர்கள் தொலைந்தே போகட்டும்.”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *