உள்நாடு

“சஜித் பிரேமதாச நிச்சயமாக ஜனாதிபதி ஆவார். தோட்ட மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பார்.” -பழனி திகாம்பரம் நம்பிக்கை

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ நிச்சயம் வெற்றி பெறுவார். ரணசிங்க பிரேமதாஸவைப் போன்று அவரது புதல்வரான சஜித் பிரேமதாஸவும் எமது மக்களுக்கு நன்மை செய்வார் என நம்புகின்றோம்.” – என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி. தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்திடும் நிகழ்வில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“200 ஆண்டுகளாக மலையக மக்கள் கூலித் தொழிலாளர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அந்த மக்களுக்கு வீட்டு உரிமையோ, நில உரிமையோ இல்லை.

நல்லாட்சி அரசில் எம்மால் ஓரளவு வீட்டு உரிமை மற்றும் நில உரிமை பெற்றுக்கொடுக்கப்பட்டது. எனினும், அதனை எம்மால் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.

எனவே, எதிர்காலத்தில் சஜித் பிரேமதாஸ தலைமையில் அமைக்கப்படவுள்ள அரசில் அந்த மக்களை நிச்சயமாக சிறு தோட்ட உரிமையாளர்களாக்குவதோடு, அவர்களுக்கு அதற்கான காணி உரிமையும் பெற்றுக்கொடுக்கப்படும்.

மக்களுக்கு நன்மை
மலைய மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டபோது, அதனை மீளப் பெற்றுக்கொடுத்த ரணசிங்க பிரேமதாஸவைப் போன்று அவரது புதல்வரான சஜித் பிரேமதாஸவும் எமது மக்களுக்கு நன்மை செய்வார் என்று நம்புகின்றோம்.

ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார். அதன் பின்னர் நில உரிமை மற்றும் சிறு தோட்ட உரிமையாளர்களுக்கான உரிமையைப் பெற்றுக்கொடுப்பதாக வழங்கியுள்ள வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

மக்கள் எம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நல்லாட்சி அரசைப் போன்று இனிவரும் காலங்களிலும் நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *