விளையாட்டு

பெத்தும் நிசங்கவின் வரலாற்று சாதனையால் வென்றது இலங்கை

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பெத்தும் நிசங்கவின் வரலாறு சிறப்புமிக்க இரட்டைச் சதத்தின் உதவியுடன் 42 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரில் 1:0 என முன்னிலை பெற்றுள்ளது.

சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இலங்கை பங்கேற்றிருக்க முதல் டெஸ்ட் தொடர் இலங்கை வசமாகியிருந்தது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று (09) கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்றது. இப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணித்தலைவரான ஹஸ்மத்துல்லாஹ் ஷஹீடி இலங்கை அணிக்கு முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை வழங்கினார்.

இதற்கமைய முதல் விக்கெட்டிற்காகக் களம் நுழைந்த இலங்கை அணியின் பெத்தும் நிசங்க மற்றும் அவிஷ்க பெர்ணான்டோ ஜோடி ஆப்கான் பந்துவீச்சாளர்களின் பந்துகளை துவம்சம் செய்தது. மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய இவ் இருவரில் பெத்தும் நிசங்க சதம் கடந்து தொடர அவிஷ்க பெர்ணான்டோ 88 ஓட்டங்களுடன் பரீட் அஹமடின் பந்தில் ஆட்டமிழக்க 182 ஓட்ட முதல் விக்கெட் இணைப்பாட்டம் முடிவுக்கு வந்தது. அடுத்து வந்த அணித்தலைவரான குசல் மெண்டிஸ் 16 ஓட்டங்களுடன் ஏமாற்றம் கொடுத்தார். இருப்பினும் ஆரம்ப வீரரான பெத்தும் நிசங்க 150 ஓட்டங்களையும் கடந்து நிலைத்திருக்க அவருக்கு நல்ல இணையினை கொடுத்த சதீர சமரவிக்ரம 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இருப்பினும் இறுதிப் பந்து வரை களத்திலிருந்து ஓட்டங்களை மைதானம் முழுக்க விளாசிய பெத்தும் நிசங்க தனதும் , இலங்கை அணியினதும் முதல் இரட்டைச் சதத்தினை பதிவு செய்து வரலாறு படைத்தார். இதனால் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 381 ஓட்டங்களை பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பெத்தும் நிசங்க 8 ஆறு ஓட்டங்கள் மற்றும் 20 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக வெறும் 139 பந்துகளை எதிர்கொண்டு 210 ஓட்டங்களை குவித்தார். பந்துவீச்சில் பரீட் அஹமட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பின்னர் மிகக் கடினமான 382 என்ற இமாலய இலக்கு நோக்கி பதிலுக்கு களம் புகுந்த ஆப்கான் துடுப்பாட்ட வீரர்களான ரஹ்மதுல்லாஹ் குர்பாஸ் (1), இப்ராஹிம் சத்ரான் (4), ஹஸ்மத்துல்லாஹ் ஷஹீடி (7) ஆகியோரை ப்ரமோத் மதுஷான் வேகத்தில் வெளியேற்ற , மற்றைய முன்னனி வீரர்களான ரஹ்மத் ஷா (7), குல்படின் நைப் (16) ஆகியோரை துஸ்மந்த சமீர பெவிலியன் அனுப்ப 55 ஓட்டங்களுக்குள் முதல் 5 விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து நின்றது ஆப்கான் அணி.

இருப்பினும் 6 ஆவது விக்கெட்டில் இணைந்த முஹம்மது நபி மற்றும் அஸ்மதுல்லாஸ் ஒமர்ஷாய் ஜோடி இலங்கை பந்துவீச்சை பதம் பார்த்து ஓட்ட வேகத்தை உயர்த்தியதுடன் தத்தமது சதங்களையும் பதிவு செய்து இலங்கை அணியின் வெற்றியை தாமதப்படுத்தியது. இந்த ஜோடி தமக்கிடையில் பெறுமதிமிக்க 242 ஓட்டங்களைப் பகிர்ந்திருக்க முஹம்மத் நபி 136 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்து அஸ்மதுல்லாஸ் ஒமர்ஷாய் 149 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க ஆப்கான் அணியால் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 339 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. இதனால் இலங்கை அணி 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றதுடன் தொடரில் முன்னிலை பெற்றது. ப்ரமோத் மதுஷான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டியின் நாயகனாக இரட்டைச் சதம் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்த பெத்தும் நிசங்க தெரிவானார். (அ)
(அரபாத் பஹர்தீன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *