Monday, July 8, 2024
Latest:
விளையாட்டு

கண்காட்சி உதைப்பந்தாட்டப்போட்டி. கடற்படையை வீழ்த்தியது ஏறாவூர் இளந்தாரகை.

புத்தளம் லெஜன்ஸ் உதைப்பந்தாட்ட கழகம் ஏற்பாடு செய்திருந்த சினேகபூர்வ கண்காட்சி உதைபந்தாட்ட போட்டியில் இலங்கையின் முதல்தர தொடர்களில் பங்கேற்கும் கழகமாக இலங்கை கடற்படையின் சீ ஹவுக்ஸ் அணியை 2:1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய ஏறாவூர் இளந்தாரகை (YSSC) உதைபந்தாட்ட கழகம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுக்கொண்டது.

புத்தளம் நகரசபை மைதானத்தில் (2) பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமான போட்டியில் இரு கழக வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் அனுபவமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை கடற்படை கழகம் முதல் கோலை உட்செலுத்தி தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியது. இருப்பினும் பதில் கோல் அடிக்கும் இளந்தாரகை (YSSC) வீரர்களின் முயற்சி பலனில்லாமல் போக முதல் பாதி 1:0 என இலங்கை கடற்படை வசமானது.

பின்னர் ஆரம்பித்த இரண்டாவது பாதி ஆட்டத்தில் புது உத்வேகத்துடனும் வியூகத்துடனும் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களம் கண்டது இளந்தாரகை (YSSC) கழகம். இருப்பினும் தமது முன்னிலையை தக்கவைத்துக் கொள்ள தடுப்பு ஆட்டத்தை மேற்கொண்ட இலங்கை கடற்படை கழகத்தின் வியூகங்களை முறியடித்து சிறப்பான பந்து பரிமாற்றம் மூலம் இளந்தாரகை ( YSSC) கழகத்தின் முன்கள வீரரான முஸ்தாக் முதல் கோலை உட்செலுத்த மைதானம் கரகோசத்தால் அதிர்ந்ததுடன் போட்டி 1:1 என சமநிலை பெற்றது.

பின்னர் தொடர்ந்த போட்டியில் மிகச் சிறந்த பந்துப் பரிமாற்றத்தை பெற்ற முஸ்தாக் தன் பங்கிற்கு 2ஆவது கோலையும் உட்செலுத்த 2:1 என முன்னிலை பெற்றது இளந்தாரகை (YSSC) கழகம். மேலதிக நேரத்தில் இலங்கை கடற்படை கழகத்தின் கோல் முயற்சிகள் கைகொடுக்காமல் போக போட்டி முடிவில் 2:1 என பலமிக்க இலங்கை கடற்படை கழகத்தை வீழ்த்தியது இளம் வீரர்களைக் கொண்ட இளந்தாரகை (YSSC) கழகம்.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *