உள்நாடு

மும்மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களாக எதிர்கால சந்ததிகளை உருவாக்க வேண்டும்.. -எஸ்.எம். சபீஸ்

ஏனைய மொழிகளை கற்கும்போது மற்ற மதத்தவர்களின் உணர்வுகளையும், கலாச்சார விழுமியங்களையும் புரிந்து கொள்ளமுடியும். நமது பிள்ளைகள் எமது தாய்மொழியில் கல்வி கற்றாலும் இன்னும் இரண்டு மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களாக வளர்வதற்கு நாம் முறையாக முதலீடு செய்ய வேண்டும் என அக்கறைப்பற்று அனைத்து பள்ளிவாசல் சம்மேளன முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் பிரதானியுமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று ரெயின்போ முன்பள்ளி பாடசாலை மாணவர்கள் விடுகை விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் அக்கறைப்பற்று மாநகர அல்லாஜ் மண்டபத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலேயே எஸ்.எம். சபீஸ் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இன்று உலகம் சகல துறையிலும் அதீத வளர்ச்சியைக் கண்டு வருகின்றது. தொழில்நுட்பங்கள் நாம் நினைத்திராத எல்லைகளில் எல்லாம் வளர்ச்சி கண்டுவருகின்றது. அவற்றை சந்திக்கும் ஆற்றல் மிக்கவர்களாக நமது எதிர்கால சந்ததிகளை உருவாக்க வேண்டிய கடமை எமக்கிருக்கிறது.
இந்நேரத்தில் நமது பிள்ளைகள் எமது தாய்மொழியில் கல்வி கற்றாலும் கூட ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களாக வளர்வதற்கு நாம் முறையாக முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு ஏனைய மொழிகளை கற்கும்போது மற்ற மதத்தவர்களின் உணர்வுகளையும், கலாச்சார விழுமியங்களையும் அவர்களால் புரிந்து கொள்ளமுடிவதுடன் ஒற்றுமையாகவும் வாழ்வார்கள்.
அதுமாத்திரமல்லாமல் நவீன கல்வித் திட்டங்களை தேடிப்படிப்பதற்க்கும் இது வழிவகுக்கும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அரச அதிகாரிகள், கல்விப்பணிமனை அதிகாரிகள், குழந்தைகள் வளர்ப்பு ஆலோசகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(நூருல் ஹுதா உமர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *