உள்நாடு

ரணில் விக்கிரமசிங்க அதிக வாக்குகளால் வெற்றி பெறுவதாகக் கூறப்படுவது நகைப்புக்குரியது – செய்தியாளர்களிடம் முஜீபுர்ரஹ்மான் பரிகாசம்

அநுர குமாரதுங்கவின் தேர்தல் கூட்டத்தினை விடவும் ரோஹண விஜேவீரவின் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் இரட்டிப்பாக இருக்கும் என, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் செய்தியாளர்களிடம் (16) தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் குறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
அரசியலமைப்புக்கு உட்பட்ட முறையில் இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று கட்டாயம் நடத்தப்பட வேண்டும். அதனை ஒத்திவைக்க எந்தவொரு அதிகாரமும் இல்லை. ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது குறித்தும் திகதியை அறிவிப்பதும் தேர்தல் ஆணைக்குழுவே தவிர, சிறிகொத்த தலைமையகம் அல்ல. கட்டாயம் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடக்கும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி சார்பில் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவார். இன்று நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமசாஸ அமோக வெற்றியினைப் பெறுவார்.
“நாம் வெற்றி பெறுவோம்” என்ற நம்பிக்கை எமக்குண்டு. ஏனைய வேட்பாளர்கள் குறித்து எங்களுக்குத் தெரியாது. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு இன்று நாடு விழுந்துள்ள நிலையில் இருந்து மேலெல பொருளாதார ரீதியாக திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று கூறிக் கொள்கிறோம்.
எமக்கு இம்முறை 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கும். ரணில் விக்கிரமசிங்க அதிக வாக்குகளால் வெற்றி பெறுவதாகக் கூறப்படுவது நகைப்புக்குரியது. ஏனெனில், மக்கள் நம்பும் வகையில் கருத்துக்களை முன்வைக்க வேண்டும். மக்களுக்கு ஜோக் சொல்லிக்கொண்டு திரிகின்றனர். இன்று அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்குமான விலைவாசிகள் உயர்ந்துள்ளன. முடி வெட்டுதல் முதல் தாடி வெட்டுதல் வரைக்கும் அனைத்தின் விலைகளும் உயர்ந்துள்ளன. நாட்டில் தேர்தல் நெருங்க நெருங்க நிவாரணங்கள் வழங்குவதும் சாதாரண ஒன்று. அந்த நிவாரணங்களைக் கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமெனின் குறைந்தது 75 இலட்சம் வாக்குகளையேனும் பெற வேண்டும். அப்போதுதான், அது 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதாக இருக்கும். அதனை எமது தலைவர் சஜித் பிரேமதாஸ பெறுவார் என்ற பாரிய நம்பிக்கை எமக்குண்டு.
எம்மிடம் 52 எம்பிக்கள் இருந்தனர். அதில் நான்கு பேர் அரசுடன் இணைந்தனர். இப்போது 48 எம்பிக்கள் உள்ளனர். அரசுடன் இணைவதில் இருந்து வருடக்கணக்கில் இந்த எம்பிக்களைப் பாதுகாத்தோம். எஞ்சியுள்ள 48 பேரையும் தக்கவைத்துக் கொள்வதில் பிரச்சினைகள் இல்லை. தேர்தல் நெருங்க நெருங்க, ரணில் விக்கிரமசிங்கவுடன் எவரும் இணைய மாட்டார்கள். ரணில் விக்கிரமசிங்க தோல்வி பெற்ற ஒரு தலைவர். தோல்வியடைந்த பக்கம் யார்தான் செல்வார்கள்? ரணிலின் கப்பல் கிட்டடியில் மூழ்கிப் போகும். அதில் யார்தான் ஏறுவார்கள்?
பொஹொட்டுவ அரசியலில் அவர்களுக்கு என்று ஒரு தலைவர் இல்லை. மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தலில் நிற்க முடியாது. பஷில் ராஜபகஷ இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர். கோட்டாபய ராஜபக்ஷவை மீண்டும் கொண்டுவர முடியாது. நாமல் ராஜபக்ஷ இன்னும் வயதில் சிறியவர் அவரும் சரிப்பட்டு வராது. அதனால் தம்மிக்க பெரேராவை நியமிப்பதற்கான கதைகள் பேசப்படுகின்றன. ஆனால், தம்மிக்கவுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள். பின்னர் எல்லோரும் ரணில் விக்கிரமசிங்க அருகே தான் செல்வார்கள்.
ஜேவிபி கூட்டங்களில் எப்போதும் மக்கள் கூட்டம் இருந்தது. அது ஒன்றும் புதிதல்ல. வரலாற்றில் ஜேவிபியின் மக்கள் கூட்டத்திற்கு எப்போதும் குறைவு இல்லை. அதுதான் உண்மை. ஜேவிபி கூட்டத்திற்கு எல்லாக் கட்சிகளின் ஆதரவாளர்களும் செல்கிறார்கள். இம்முறை அவர்களது வாக்குகள் அதிகரிக்கும் என நாமும் கூறுகிறோம். ஏனெனில், பொஹொட்டுவ மக்களில் சிலர் ஆதரவளிப்பார்கள். ஆனால், அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். அநுர குமாரதுங்கவின் தேர்தல் கூட்டத்தினை விடவும், ரோஹண விஜேவீரவின் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் இரட்டிப்பாக இருக்கும். ஜேவிபி வெற்றி பெறும். ஆனால், அரச தலைமைக்கு அல்ல என்று முஜீபுர்ரஹ்மான் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டார்.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *